விஜய்க்கு பிடித்த பொன்னியின் செல்வன் பாடல் இதுதானாம்.. சீக்ரெட்டை உடைத்த பெரிய பழுவேட்டரையர்!
சென்னை: பொன்னியின் செல்வன், வாரிசு என பேக் டு பேக் பெரிய படங்களில் நடித்து வரும் நடிகர் சரத்குமார் நடிகர் விஜய்க்கு பொன்னியின் செல்வன் படத்திலேயே பிடித்த பாடல் எது என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30ம் தேதி தமிழின் முதல் ஐமேக்ஸ் திரைப்படமாக வெளியாகிறது.
இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

பெரிய பழுவேட்டரையர்
சோழர்களின் பாதுகாப்பு அரணாக பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர் என இருவர் பொன்னியின் செல்வன் கதையில் உள்ளனர். இதில், பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் நடித்துள்ளார். இருவருக்கும் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளன.

ஐஸ்வர்யா ராய் ஜோடி
வயதான பெரிய பழுவேட்டரையர் தான் நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடி என்பது கதை தெரியாத ரசிகர்களுக்கான கூடுதல் தகவல். பெரிய பழுவேட்டரையரை தன் வசப்படுத்தி சோழர் குலத்தையே அழிக்க ஐஸ்வர்யா ராய் திட்டம் தீட்டுவதும் சரத்குமாரை வைத்துத் தான் படத்தில் இருக்கப் போகிறது.

கட்டப்பா மாதிரியே
பாகுபலி படத்தின் பல காட்சிகள் பொன்னியின் செல்வன் கதையை தழுவி உருவாகி இருக்கும். அதிலும், பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்கிற கேள்வியுடன் முதல் பாகம் முடிந்து இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்களை ஏங்க வைத்ததே அந்த காட்சியே இங்கே இருந்து தான் சுடப்பட்டுள்ளது என்றும் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் கூறுகின்றனர். ஆதித்த கரிகாலனை கொல்லப் போவதே இந்த பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் தான். முதல் பாகமே அந்த காட்சியுடன் முடியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

வாரிசு படத்தில்
பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் நடிகர் சரத்குமார். சமீபத்தில், குஷ்பு மற்றும் பிரபுவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.

விஜய்க்கு பிடித்த பாடல்
இந்நிலையில், சமீபத்தில் பிரஸ்மீட்டில் பேசிய நடிகர் சரத்குமார் நடிகர் விஜய்க்கு பொன்னியின் செல்வன் படத்தில் பிடித்த பாடல் குறித்து பேசியது விஜய் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. வந்தியத்தேவனின் என்ட்ரி சாங்கான பொன்னி நதி பார்க்கணுமே பாடல் தான் விஜய்க்கு ரொம்ப பிடித்த பாடல் எனக் கூறியுள்ளார் சரத்குமார்.

வந்தியத்தேவனாக விஜய்
இயக்குநர் மணிரத்னம் நாயகன் படத்தை முடித்த கையோடு கமலை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க நினைத்தார். ஆனால், அது கைகூடவில்லை. அதன் பிறகு நடிகர் விஜய்யை வந்தியத்தேவனாகவும் மகேஷ் பாபுவை அருள்மொழி வர்மனாகவும் நடிக்க வைத்து பொன்னியின் செல்வனை உருவாக்க நினைத்துள்ளார். அதுவும் நடக்காமல் போய் விட்டது. கடைசியாக தற்போது தான் கனவு படத்தை எடுத்து முடித்திருக்கிறார் மணிரத்னம்.

விஜய் மட்டும் நடித்திருந்தால்
நடிகர் விஜய்யும், மகேஷ் பாபுவும் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தால் இப்போது இருக்கும் ஹைப்பை விட பல மடங்கு அதிக ஹைப் இருந்திருக்கும் என்றும் பாகுபலி இரண்டாம் பாக வசூலை முறியடித்திருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். வந்தியத்தேவன் விஜய்க்கு பிடித்த கதாபாத்திரம் என்பதால் தான் பொன்னி நதி பாடலும் அவருக்கு பிடித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











