விஷாலுக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்னையும் இல்லை... மனம் திறந்த சரத்குமார்!
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக பேசப்பட்டு வரும் பிரச்னை சரத்குமாருக்கும் விஷாலுக்குமான மோதல்தான். நேரடியாக இருவரும் சண்டை போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் கூட விஷால் வரலட்சுமி காதல், நடிகர் சங்கத்தை சரத்குமாரிடம் இருந்து விஷால் கைப்பற்றியது, சரத்குமார் மீது வழக்குப் பதிவு, நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம் என்று இருவரின் நடவடிக்கைகளும் பனிப்போரை உறுதி செய்கின்றன. சரத்குமாரை வைத்து விஷாலின் தந்தை மகாபிரபு படம் தயாரித்ததில் தொடங்கிய பிரச்னை இது என்றுகூடச் சொல்வார்கள்.
கடந்த வாரம் ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார் சரத்குமார். அப்போது வரலட்சுமி படத்தைக் காட்டியபோது 'எனக்கு மட்டுமே சொந்தமான சொத்து' என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார் சரத்குமார். இது விஷாலுக்கு சொன்ன பதிலாகவே எடுத்துக்கொண்டனர்.

அந்த பேட்டியின் தொடர்ச்சி நேற்று முன் தினம் வெளியானது. அதில் சமீபத்தில் விஷால் பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட விஷால் ஆன்தம் பாடலை சரத்குமாரை பாட வைத்தனர். அவரும் பாடி விட்டு 'இதில் என்ன தப்பு இருக்கு? விஷாலுக்கும் எனக்கும் எந்தவித தனிப்பட்ட பிரச்னையும் இல்லை. அவர் பாட்டை பாடுவதில் எனக்கு பிரச்னை இல்லை' என்று சொல்லியிருக்கிறார். எனவே சமாதானமாகி விஷாலை மருமகனாகக் கூட ஏற்றுக்கொள்வார் என்று அதற்குள் கோலிவுட்டில் கணிப்புகள் தொடங்கியிருக்கின்றன.
நடிகர் சங்கத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கிறது. இன்னும் சில வேலைகள் இருப்பதால் மீண்டும் தேர்தலில் போட்டியிட இருப்பதாக விஷால் அறிவித்திருக்கிறார். அவரை எதிர்த்து சரத்குமார் களம் காணுவாரா? என்பதுதான் இப்போதைய ஹாட் டாக்.


Click it and Unblock the Notifications











