நடிகர் சங்க கணக்குகளை ஒப்படைக்காவிடில் நடவடிக்கை... எச்சரிக்கை விடுத்த விஷால்
சென்னை: நடிகர் சங்கத்தின் வரவு செலவு கணக்கை சரத்குமார் இன்னும் ஒப்படைக்கவில்லை என்று நடிகர் விஷால் மீண்டும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை ஒப்படைக்காவிடில் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தெரிவித்திருந்தார்.
இதற்கு நடிகர் சரத்குமார் ஆடிட்டர் வந்தவுடன் கணக்குகள் ஒப்படைக்கப்படும் என்று பதிலளித்து இருந்தார். இந்த விவகாரத்தில் நடிகர் சங்க செயலாளர் விஷால் நடிகர் சங்க கணக்குகளை இன்னும் ஒப்படைக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

சமீபத்தில் கடலூரில் உள்ள மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஷால் உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் நடிகர் சங்கத்தின் மூலம் 'மக்களுக்காக நாம்' என்ற ஒரு திட்டத்தினை ஆரம்பித்து இருக்கிறோம்.
இதன் மூலம் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு உதவி செய்ய திட்டமிட்டு தற்போது நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம் என்று கூறினார்.
பின்னர், நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா? என்ற பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நடிகர் விஷால் "இதுவரை நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை ஒப்படைக்கவில்லை.
இதுதொடர்பாக நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி, அதன் முடிவுப்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











