பலே கோவை சரளா சேச்சி... சசிகுமார் பாராட்டு மழை!
கிடாரிக்குப் பிறகு சசிகுமார் நடிக்கும் பலே வெள்ளையத் தேவா படம் அடுத்த வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
இந்தப் படத்தில் சசிகுமார் ஜோடியாக பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தான்யா ரவிச்சந்திரன் அறிமுகமாகியிருக்கிறார். சோலை பிரகாஷ் என்பவர் இயக்கியிருக்கிறார்.

படத்தின் முக்கிய பாத்திரம் கோவை சரளாதானாம். சங்கிலி முருகன் ஜோடியாக வரும் சரளாவின் வேடம் குறித்துதான் அதிகமாகப் பேசுகிறார் சசிகுமார்.
அவர் கூறுகையில், "குடும்ப உறவுகளை முழுநீள காமெடியுடன் சொல்லும் படமாக 'பலே வெள்ளையத் தேவா' உருவாகியிருக்கிறது. இப்படத்தில் ரோகிணி எனக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.
செல்பி காத்தாயி என்ற கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்திருக்கிறார். படத்தின் போஸ்டர்களைப் பார்க்கும் போது 'பாட்டி சொல்லை தட்டாதே' படம்போல் இருப்பதாக சொல்கிறார். இந்த படத்தில் கோவை சரளா எனக்கு பாட்டியும் கிடையாது. அவருக்கு நான் பேரனும் கிடையாது. அந்தப் படத்துக்கும் இதற்கும் சம்பந்தமும் கிடையாது.
இப்படத்தில் கோவை சரளா ராப் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இப்படத்தின் கதையைக் கேட்டதும், அந்த பாட்டி கதாபாத்திரத்திற்கு மனோரமா ஆச்சிதான் பொருத்தமாக இருப்பார் என்று என் மனதுக்குள் தோன்றியது. ஆனால், இப்போது ஆச்சி நம்மிடத்தில் இல்லை என்பதால், அதற்கடுத்தபடியாக சேச்சி கோவை சரளாதான் இதற்கு சரியாக பொருந்துவார் என்று அவரை நடிக்க வைத்தோம்.
படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைவிட கோவை சரளாவின் கதாபாத்திரம்தான் மிகவும் வலுவாக இருக்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications











