இந்த சின்ன நடிகனை இனி எந்தத் தயாரிப்பாளரும் புக் பண்ணாதீங்க! - சத்யராஜின் நக்கல்
இந்த சத்யராஜை வைத்துப் படமெடுத்தால் நாளை தொல்லைகள் வரும் என நினைக்கும் எந்தத் தயாரிப்பாளரும் இனி இந்த சின்ன நடிகனை ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்று நடிகர் சத்யராஜ் தனக்கே உரிய நக்கல் பாணியில் கூறியுள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் கன்னடர்களைத் திட்டியதற்காக சத்யராஜ் மன்னிப்புக் கேட்காவிட்டால், பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பு தலைவர் வட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.

பாகுபலி 2 கர்நாடகத்தில் தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. மூன்று மொழிகளிலும் இந்தப் படத்தைப் பார்க்க பெரும் கூட்டம் உள்ளது. படம் வெளியாகாவிட்டால் ரூ 50 கோடிக்கு மேல் பாதிக்கும் சூழல்.
எனவே சத்யராஜ் கன்னட மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே நேரம், இனி வரும் காலங்களில் காவிரி போன்ற பிரச்சினைகளில் போராட வேண்டிய தேவை இருந்தால் கட்டாயம் போராடுவேன் என்றும், தன்னால் தொல்லை வரும் என கருதும் தயாரிப்பாளர்கள் தயவு செய்து ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்றும் பகிரங்கமாகவே தெரிவித்துவிட்டார்.
அந்த மன்னிப்பு அறிக்கையின் ஒரு பகுதி இது:
இனி வரும் காலங்களில் தமிழ் ஈழ மக்களின் பிரச்சனையானாலும் சரி, காவிரி நதிநீர் பிரச்சனையானாலும் சரி, விவசாயிகள் பிரச்சனையானாலும் சரி, தமிழக மக்களின் நலன் சார்ந்த அனைத்து நியாயமான பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதை தெள்ளத் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்.
இப்படி நான் கூறுவதால், இந்த சத்யராஜை வைத்து படம் எடுத்தால் எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவு செய்து இந்த சாதாரண சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தங்கள் செய்ய வேண்டாம், என்னால் நஷ்டம் அடைய வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


Click it and Unblock the Notifications











