அந்த டைரக்டர் ஏன் நடிகரானார் தெரியுமா?- சத்யராஜ் சொன்ன கவுண்டரின் 'கவுன்ட்டர்!'
49ஓ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கவுண்டமணி, சிவகார்த்திகேயன் பேசியதை நேற்று தந்திருந்தோம். அவர்களுக்கு இணையாக மிக சுவாரஸ்மாகப் பேசிய இன்னொரு பிரபலம் சத்யராஜ்.
நிச்சயம் மற்ற நடிகர்களைவிட சத்யராஜுக்குத்தான் கவுண்டருடன் அதிக அனுபவங்கள் இருக்கும் என்பது திரையுலகம் அறிந்தது.
அந்த அனுபவங்களிலிருந்து சத்யராஜ் சொன்னவற்றை இங்கே தருகிறோம்...
‘‘நான் எத்தனையோ அழகான நடிகைகளுடன் ஜோடியாக நடித்திருந்தாலும், அண்ணன் கவுண்டமணியுடன் நடித்ததுதான் ஜாலியான அனுபவங்கள்.

அவருடன் நடிக்கும்போது நொடிக்கு நொடி கேலியும் கிண்டலும் செய்து சிரிக்க வைப்பார். மனதில் பட்டதை நகைச்சுவையாக வெளியில் பேசுவதில், அவருக்கு இணை அவர்தான்.
நான், ‘வீரநடை' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, என் கைவசம் வேறு படங்கள் இல்லை. அந்த ஒரு படம் மட்டும்தான் இருந்தது.
என்றாலும் நான் விட்டுக் கொடுக்காமல் டைரக்டர் சீமானிடம், ‘‘மாலை ஆறு மணிக்கு என்னை விட்டு விடுங்கள். ஒரு டைரக்டர் கதை சொல்ல வருகிறார்'' என்று கூறினேன். அருகில் இருந்த கவுண்டமணி அண்ணன், ‘‘எப்படியிருந்தாலும் அந்த கதையை நீங்க வேண்டாம்ன்னு சொல்லப் போவதில்லை. கண்ணுக்கு எட்டின தூரம் வரை எந்த தயாரிப்பாளரும் உங்களைத் தேடி வரவில்லை. எதற்கு இந்த பந்தா?'' என்று கிண்டலடித்தார். எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஒரு டைரக்டர் திடீரென்று நடிகர் ஆனார். அதற்கு அவர் 'நான் ஒரு பள்ளிக்கூட விழாவுக்கு போய் இருந்தேன். அங்குள்ள மாணவர்கள் அனைவரும் என்னை நடிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அதனால்தான் நடிக்கிறேன்' என்றார். ‘அட, அது பிளைன்ட் (கண்பார்வையற்றவர்) ஸ்கூல்' ஆ இருக்கும்பா'' என்று அண்ணன் கவுண்டமணி அடிச்சார் பாருங்க...
இது மாதிரி அண்ணனுடன் எனக்கு நிறைய அனுபவங்கள். ‘யு டியூப்'பில் கவுண்டமணிக்குத்தான் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘கட்டப்பா ஏன் பிரபாசை குத்தினார்?' என்ற கேள்விக்கு, ‘ராத்திரி கண் தெரியாமல் குத்திட்டாம்பா' என்று கவுண்டமணி சொல்வது போல், கமெண்ட் போடுகிறார்கள்.
இப்படி அவரைப் பத்தி நிறைய சொல்லிட்டே போகலாம்," என்று சொல்ல, கவுண்டமணி அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











