எங்கள் மகளுடன் போனில் கூட பேசவிடுவது இல்லை கார்த்தி: நடிகை சாட்னாவின் தாய் குமுறல்
சென்னை: தயாரிப்பாளர் கார்த்தி தனது மகளை மூளை சலவை செய்து ஏமாற்றி தங்களிடம் இருந்து பிரித்துவிட்டதாக நடிகை சாட்னா டைட்டஸின் தாய் மாயா புகார் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த பிச்சைக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் கேரளாவை சேர்ந்த சாட்னா டைட்டஸ். பிச்சைக்காரன் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தின் கார்த்தியும், சாட்னாவும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சாட்னாவின் தாய் மாயா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சாட்னா
என் கணவர் டைட்டஸ் கேரளாவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். எங்கள் மகள் சாட்னா +2 படித்துக் கொண்டிருக்கிறார். படித்துக் கொண்டே அவர் சினிமா படங்களிலும் நடித்து வருகிறார்.

கார்த்தி
நீ நடிக்காதே, நான் உன்னை பெரிய தயாரிப்பாளர் ஆக்குகிறேன். நாம் லண்டனில் செட்டில் ஆகிவிடலாம் என்று பட வினியோகஸ்தர் கார்த்தி என் மகளுக்கு ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி எங்களிடம் இருந்து பிரித்துவிட்டார்.

நடிப்பு
திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என கார்த்தி எங்கள் மகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் சாட்னா தான் நடிக்கவிருந்த சில படங்களுக்காக வாங்கியிருந்த முன்பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

பேச முடியவில்லை
எங்கள் மகளுடன் செல்போனில் கூட பேச முடியவில்லை. கார்த்தி சாட்னாவை பதிவுத் திருமணம் எல்லாம் செய்யவில்லை. அவர் சாட்னாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். சாட்னாவை மீட்கக் கோரி நடிகர் சங்கத்திடம் புகார் அளிக்க உள்ளேன்.


Click it and Unblock the Notifications











