சகிப்புத்தன்மை விவகாரம்...போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பிற்கு செல்லும் அமீர்கான்
மும்பை: சகிப்புத்தன்மை விவகாரத்தால் இந்தி நடிகர் அமீர்கான் நடித்து வரும் டங்கல் படத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சகிப்புத்தன்மை விவகாரத்தில் நாட்டை விட்டே வெளியேறி விடலாம் என்று மனைவி கூறியதாக நடிகர் அமீர்கான் கூறியது நாட்டில் பெரிய பிரச்சினைகளை உண்டு பண்ணியது.
இந்நிலையில் அமீர்கான் நடித்து வரும் டங்கல் படப்பிடிப்பில் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

சகிப்புத்தன்மை விவகாரம்
சகிப்புத்தன்மை விவகாரத்தில் நாட்டை விட்டே போய்விடலாம் என்று மனைவி கூறியதாக அமீர்கான் கூறியது நாட்டில் சர்ச்சைகளை உண்டு பண்ணியது. நாடு முழுவதும் அமீருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்தன. இந்த விவகாரத்தில் தான் ஒரு இந்தியன் என்பதில் பெருமைப்படுவதாகக் கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமீர்கான்.

டங்கல்
ஆனால் இந்த விவகாரம் இன்னும் பிரச்சினைகளை உண்டு பண்ணிக் கொண்டுதான் இருக்கிறது. அமீர்கான் தற்போது டங்கல் என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

சிவசேனா தொண்டர்கள்
அமீர்கான் மற்றும் படக்குழுவினர் தங்கியிருக்கும் ஐந்து நட்சத்திர விடுதியில் சிவசேனா தொண்டர்கள் நுழைந்து சமீபத்தில் அமீர்கானைத் தாக்க முயற்சி செய்திருக்கின்றனர்.

அதிகரித்த பாதுகாப்பு
இதனால் பஞ்சாப் போலீசார் அமீர்கானுக்கு போலீஸ் பாதுகாப்பை தற்போது அதிகப்படுத்தி இருக்கின்றனர். சண்டிகரில் இருந்து 125 கிலோ மீட்டர் தூரத்தில் நடைபெறும் டங்கல் படத்தின் படப்பிடிப்பிற்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரித்து இருப்பதாக போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனர் ருபெந்தர்கவுர் தெரிவித்து இருக்கிறார்.

அச்சப்படும் அமீர்கான்
அமீர் கான் தங்கும் இடம், அவரது காரின் முன் பின்னாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தவிர படக்குழுவினர் சார்பிலும் தனியாக பாதுகாப்பு அதிகாரிகளை ஏற்பாடு செய்து உள்ளனர். எனினும் இந்த சம்பவம் அமீர் மனதில் கவலையை தோற்றவித்து இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











