தம்பி விஜய் படத்துக்கு நெருக்கடி கொடுத்தால்.. பின் விளைவுகளை.. சீமான் எச்சரிக்கை
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், ஆந்திரா, தெலங்கானா பகுதிகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவால் வாரிசு படத்தின் ரிலீஸுக்கு சிக்கல் எழுந்துள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாக சீமான் களமிறங்கியுள்ளார்.

சீமான் அறிக்கை
விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வாரசுடு என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது. தில் ராஜூ தயாரித்துள்ள இந்தப் படத்தை, வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ளார். இந்நிலையில், நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும், டப்பிங் படங்களுக்கு மிச்சம் இருக்கும் தியேட்டர்களை ஒதுக்கினால் போதும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது திரையுலக வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழ்ப் படங்களின் வெளியீட்டுக்கு எதிரான தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என" அறிக்கை கொடுத்திருந்தார்.

சீமான் எச்சரிக்கை
மேலும், அந்த அறிக்கையில் "தெலுங்குத் திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்விதத் தடையுமின்றி வெளியாகிக் கொண்டிருக்கிற நிலையில், தமிழ்த் திரைப்படங்களுக்கு எதிராக தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத் தவறான முன்னுதாரணமாகும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களைச் சேர்ந்த திரைத் துறையினருக்கும் புகலிடமாகவும், மூலமாகவும் விளங்கிய தமிழ்த் திரையுலகை வஞ்சிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இந்த முடிவால், விஜய்யின் 'வாரிசு' வெளியீட்டுக்கான திரையரங்க ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எவ்வித பாகுபாடும் இல்லாத நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவு தேவையற்றதாகும். இதனை திரும்பப் பெறாவிட்டால் தெலுங்கு திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என எச்சரிக்கை" செய்திருந்தார்.

தம்பி நீ கவலை படாத
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "என் தம்பி விஜய்யின் வாரிசு படத்தை ரிலீஸ் பண்ண தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கொடுக்கும் நெருக்கடி இங்கே தேவையில்லாதது. இத்தனைக்கும் வாரிசு படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் இருவருமே தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் தான். தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னட படங்களுக்கு எந்த பாகுபாடும் இல்லாமல் வரவேற்பு கொடுத்து வருகிறோம். ஏற்கனவே இந்த முடிவை திரும்ப பெறவேண்டும் என அறிக்கை கொடுத்துருக்கேன். அப்படி இருந்தும் வாரிசு ரிலீஸுக்கு சிக்கல் வந்தால், பின்னர் நாங்களும் அதே முடிவுக்கு வரவேண்டியது இருக்கும்" என மீண்டும் எச்சரிக்கை செய்துள்ளார் சீமான். இன்னொருபக்கம் விஜய்யும் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உண்மையான நிலவரம் என்ன?
வரும் பொங்கல் தினத்தன்று தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள 'வால்டையர் வீரய்யா', பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' படங்கள் வெளியாக உள்ளன. அதேநேரம் விஜய்யின் வாரிசு படமும் வெளியானால் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவின் படங்களின் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தெலுங்கு சீனியர் நடிகர்கள் தான் விஜய்யின் வாரிசு படத்துக்கு எதிராக பிரச்சினையை ஏற்படுத்த நினைப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், இப்போது பான் இந்தியா என்று சினிமா மார்க்கெட் மாறிவிட்ட நிலையில், தெலுங்கு, தமிழ்ப் படங்கள் என மொழிவாரியாக பாகுபாடு பார்ப்பது தவறானது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய திரையுலகம்
முன்பெல்லாம் சென்னையை தலைமையாகக் கொண்டு தென்னிந்திய திரையுலகம் என்ற அமைப்பே இருந்து வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிப் படங்களுக்கும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் இருந்தது. இப்போதும் கூட தமிழ்நாட்டில் அப்படி மொழியை அடையாளப்படுத்தி படங்களுக்கு ஆதரவோ புறக்கணிப்போ நடப்பது இல்லை. ஆனால், தெலுங்கு திரையுலகம் இப்படி புதிதாக கட்டுப்பாடுகள் விதிப்பது, அவர்களுக்கே எதிராக திரும்பும் என சினிமா வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எந்தப் படம் நன்றாக இருக்கிறதோ அதற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்கட்டும், அதை தயாரிப்பாளர்கள் முடிவு செய்யக் கூடாது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











