கடைசி விவசாயி படத்தை பார்க்க ஞானம் வேணும்...முதல் ஆளாக விமர்சனம் தந்த சீமான்
சென்னை : டைரக்டர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படம் நாளை தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ரிலீசுக்கு முன்பு இந்த படத்தை இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமானுக்கு போட்டு காண்பிக்கப்பட்டது.
அழிந்து வரும் பாரம்பரிய விவசாயத்தை பற்றியும், விவசாயிகளின் உணர்வுகள் பற்றியும் சொல்வதாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்து விட்டு சீமான் கடைசி விவசாயி பற்றிய தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். படம் பற்றி தனது பாராட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.

துணிவான முயற்சி
சீமான் கூறுகையில் இப்படி ஒரு உணர்வை திரையில் கொண்டு வர வேண்டும் என துணிந்து எடுத்த முடிவிற்கே மிகப் பெரிய பாராட்டுக்கள். இந்த உணர்வை ஏற்கனவே மேற்கு தொடர்ச்சிமலை படத்தில் விஜய் சேதுபதி தயாரித்து நடித்தது பாராட்டுக்குரியது. மணிகண்டனின் காக்காமுட்டை படத்தில் இன்று இருக்கும் சந்தை மயமாக்கப்பட்ட வர்த்தக உலகத்தில் பிசா என்பது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மிக அழகாக சொல்லி இருப்பார்.

இந்த படம் பார்க்க ஞானம் வேணும்
அதற்கு பிறகு இடையில் ஏன் இத்தனை காலம் இந்த படத்தை அப்படியே போட்டு வைத்துள்ளீர்கள் என்று கூட கேட்டேன். ஆனால் அதை இந்த அளவிற்கு செதுக்குவதற்கு அவர் இந்த அவகாசத்தை எடுத்துக் கொண்டுள்ளார். சீன அறிஞர் சொன்னதை போல் அறிவு என்பது அறிவது. ஞானம் என்பது உணர்வது. இந்த படத்தை பார்ப்பதற்கு ஞானம் வேண்டும். ஒவ்வொரு உணர்வையும் உணர்ந்து தெளிய வேண்டும்.

வழக்கமான சினிமாவில் மாறுபட்டது
வியாபாரமாகிவிட்ட உலகில் நம்முடைய தொன்று தொட்ட வேளாண்மை, கலாச்சாரம் போன்றவை எப்படி சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதை இரண்டு மணி நேரத்தில் மிக அழகாக திரையில் சொல்லி இருக்கிறார்கள். வழக்கமான சினிமாவில் வரும் நகைச்சுவை, சண்டை, பாட்டு எல்லாம் உண்டு. ஆனால் இதுவரை பார்த்த முகங்கள் இல்லாமல், வண்ண வண்ண பின்புலங்கள் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கு.

மணிகண்டனுக்கு பெரிய தைரியம்
கடைசி விவசாயியாக நடித்திருக்கும் பெரியவர் என்ன இயல்பாக நடித்துள்ளார். கேட்கிற திறனும் இல்லை. லைவ் ரெக்கார்டிங் வேறு. எந்த பயிற்சியும் இல்லாத புதிய முகங்கள் அவ்வளவு நேர்த்தியாக நடித்துள்ளது அவ்வளவு வியப்பாக உள்ளது. மிகச் சிறந்த படம். பல விஷயங்களை சொல்லிக் கொண்டே வந்துள்ளனர். மணிகண்டனே கதை எழுத்து, இயக்க, தயாரிப்பு, வசனம் எல்லாம் செய்திருக்கிறார். இதற்கு ஒரு அசாத்திய தைரியம் தேவை. ஒரு விஷயத்தை எதிர்த்து ஒரு கருத்தை எடுத்து முன்வைக்கும் போது எதிர்ப்பு, விமர்சனம் என எல்லாம் வரும். அதையும் மீறி எடுத்து வைக்க ஒரு அசாத்திய துணிவு வேணும். அதற்கு ஒரு போர் வீரனை விட அதிக துணிவு வேண்டும். இதை நான் அப்படி தான் பார்க்கிறேன். இதை படமாக நினைக்காமல் வாழ்வியலாக நினைத்து அனைவரும் திரையில் சென்று பார்க்க வேண்டும். அனைவரும் ஆதரவு தர வேண்டும். அப்போது தான் இன்னொரு மேற்கு தொடர்ச்சிமலை, இன்னொரு காக்கா முட்டை, இன்னொரு கடைசி விவசாயி போன்ற படங்கள் வரும்.
Recommended Video

படத்திற்கு ஆதரவு தாருங்கள்
மணிகண்டன் போன்றவர்கள் டைரக்டர் பாலுமகேந்திர போன்ற நேர்த்தியாக விஷயங்களை திரையில் கொண்டு வரக்கூடியவர்கள். இப்படிப்பட்டவர்கள் கிடைப்பது அரிது. அவர்களுக்கு நாம் ஆதரவு வழங்க வேண்டும். இது போன்ற படங்களை வெற்றி பெற செய்தால் தான் மீண்டும் மீண்டும் இது போன்ற படங்களை எடுக்க அவர்களுக்கு ஊக்கமாக அமையும். இதற்காக இரண்டு வருடம் உழைத்துள்ளார். அவருக்கு உதவிய விஜய் சேதுபதி, படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











