சினிமா - ஏழை நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனி : சீனு ராமசாமி வருத்தம்
சென்னை : திரைப்படங்களுக்கு 30% என்ற கேளிக்கை வரியை 10% ஆகக் குறைத்து வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த 10% கேளிக்கை வரி முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யக்கோரி தியேட்டர் ஊழியர்கள் சிலர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தியேட்டர்களில் புதிய படங்களை வெளியிடமாட்டோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

கேளிக்கை வரி விதிப்பால் அரசுக்கு எதிராகப் பொங்கும் திரைத்துறையினரையும், திரையரங்க உரிமையாளர்களையும் சமாதானம் செய்யும் பொருட்டு, தமிழக அரசு, டிக்கெட் விலையை 25% அதிகரித்துக்கொள்ள தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் டிக்கெட் கட்டணம் மேலும் உயரவிருக்கிறது. இது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சினிமா டிக்கெட் விலை உயர்வால் சாமானிய மக்கள் சினிமா பார்க்கவே முடியாத நிலை நிலவுகிறது எனக் கூறியுள்ளார்.
'தியேட்டர் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகிவிட்டது. இதனால் நியாயமாகப் பார்க்கமுடியாத மக்களால் சினிமாத் தொழில் அழியநேரும்' எனக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.


Click it and Unblock the Notifications











