நடமாடும் வீடு.. பிரபல நடிகருக்கு குண்டு துளைக்காத சொகுசு கேரவன்.. இவ்வளவு வசதி இருக்காமே!
கொச்சி: நடிகர் மம்மூட்டி வாங்கியிருக்கும் குண்டு துளைக்காத புதிய கேரவனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
பிரபல மலையாள ஹீரோ மம்மூட்டி. இவர் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
பொதுவாக பெரிய ஹீரோக்கள் தங்களுக்கு சொந்தமாக கேரவன்களை வைத்துக்கொள்வது வழக்கம்.

பிரமாண்ட கேரவன்
ஷாருக்கான் உட்பட பல பிரபல பாலிவுட் ஹீரோக்கள் சொந்தமாக பிரமாண்ட சொகுசு கேரவன்களை வைத்துள்ளனர். தமிழ் ஹீரோக்கள் வாடகைக்கு கேரவன்களை எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் நடிகர் மம்மூட்டி சொந்தமாக, அனைத்து வசதிகளையும் கொண்ட பிரமாண்ட கேரவன் ஒன்றை ஸ்பெஷலாக உருவாக்கி உள்ளார்.

கொரோனா பாதிப்பு
கொரோனா காரணமாக, கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவில், கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு முதலில் அதிகமாக இருந்தது. இதனால் வீட்டுக்குள் இருக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர். அதை முறையாகக் கடைபிடித்த நடிகர் மம்மூட்டி, வீட்டிலேயே இருந்தார்.

வெளியே வந்தார்
அரசு தளர்வுகளை அறிவித்த பின்னர், சுமார் 275 நாட்களுக்குப் பிறகு வீட்டை விட்டு அவர் சமீபத்தில் வெளியே வந்தார். அவருடன் நடிகர் ரமேஷ் பிஷராடி, தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப், சினிமா தயாரிப்பு நிர்வாகி பாதுஷா ஆகியோரும் வந்தனர். கொச்சியில் உள்ள கடை ஒன்றில் அவர் கட்டன் சாயா குடித்த புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

நடமாடும் வீடு
இந்நிலையில், மம்மூட்டி வாங்கியுள்ள புதிய குண்டு துளைக்காத கேரவன் பரபரப்பாகி இருக்கிறது. வால்வோ பஸ்சில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேரவன், நடமாடும் வீடு போல உருவாக்கப்பட்டுள்ளது. படுக்கையறை, டாய்லெட், மினி தியேட்டராக்கும் டிவி அமைப்பு, சமையலறை உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன.

புல்லட் புரூப் கண்ணாடி
வேனுக்குள் அமர்ந்தால் எந்த அதிர்வும் ஏற்படாதவாறும் புல்லட் புரூப் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கேரவனில், ஒரு வாரத்துக்கான தண்ணீரை சேமிக்கும் வசதியும் இருக்கிறதாம். இந்த கேரவன் பற்றிய செய்தியும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











