ஐகோர்ட் உத்தரவிட்டும் இன்னும் ஸ்க்ரீனிங் லிஸ்ட்டில் வரவில்லை - நீடிக்கும் 'செக்ஸி துர்கா' சர்ச்சை!
கோவா : 48-வது சர்வதேசத் திரைப்படத் திருவிழா கோவாவில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா வரும் 28-ம் தேதி நிறைவடைய இருக்கிறது.
இந்தத் திரைப்படத் திருவிழா மத்திய அரசின் சார்பில் நடத்தப்படுகிறது. உலகின் முக்கிய திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் நாணா பட்னேகர் உள்ளிட்ட இந்தியத் திரைப் பிரபலங்கள் இந்த விழாவின் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.

சர்ச்சைக்கு உள்ளான திரைப்படங்கள்
இந்தத் திரைப்பட விழா தொடங்குவதற்கு முன்பே பல சர்ச்சைகளைச் சந்தித்தது. சணல்குமார் சசிதரன் இயக்கிய 'செக்ஸி துர்கா', 'நியூட்' ஆகிய திரைப்படங்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள இந்தியன் பனோராமாவல் தேர்வு செய்யப்பட்டு, அந்தப்பட்டியல் செய்தி ஒளிபரப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

படம் திரையிடல் பட்டியலில் இல்லை
ஆனால் இறுதி செய்யப்பட்ட திரும்பி வந்த பட்டியலில் 'செக்ஸி துர்கா' மற்றும் 'நியூட்' என இரண்டு படங்கள் நீக்கப்பட்டு விட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜூரி சேர்மன் சுஜாய் கோஷ் மற்றும் இன்னும் இரு ஜூரி உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இது
திரைப்பட விழாக் குழுவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திரையிட உத்தரவு
'எஸ் துர்கா' என பெயர் மாற்றப்பட்ட 'செக்ஸி துர்கா' படத்தை கோவா திரைப்பட விழாவில் திரையிட உத்தரவிடக்கோரி, அப்படத்தின் இயக்குநர் சணல்குமார் சசிதரன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்தை கோவா திரைப்பட விழாவில் திரையிட வேண்டும் என உத்தரவிட்டது.

இன்னும் திரையிடவில்லை
நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, சென்சார் சான்றிதழையும், சென்சார் செய்யப்பட்ட படத்தையும் திரைப்பட விழா இயக்குநரகத்துக்கு அனுப்பியும், படம் திரையிடுவது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக திரைப்பட விழா இயக்குநர் சுனித் டான்டனையும் சந்தித்துப் பேசினார் சணல்குமார்.

மீண்டும் கோர்ட் படியேற முடிவு
வருகிற செவ்வாய்க்கிழமை இந்த திரைப்பட விழா நிறைவுபெற இருக்கும் நிலையில், IFFI-யின் அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் சணல்குமார். இன்றும் 'எஸ் துர்கா' படம் ஸ்கிரீனிங்கில் இடம்பெறவில்லை என்றால் நாளை மீண்டும் நீதிமன்றத்தின் உதவியை நாட இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சணல்குமார் சசிதரன்.


Click it and Unblock the Notifications











