Shah Rukh Khan: பால்கனி தரிசனம் தான் இல்லை.. ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாரூக் கான்!
மும்பை: பாலிவுட் திரையுலகின் கிங் என்று அழைக்கப்படக்கூடிய ஷாரூக் கான் நேற்று அதாவது நவம்பர் 2ஆம் தேதி தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். வருடா வருடம் தனது பிறந்த நாளில் தனது வீட்டின் முன் திரண்டு நிற்கும் ரசிகர்களை காண ஷாரூக் கான் வீட்டு பால்கனியில் நின்று கொண்டு கை அசைத்து, பறக்கும் முத்தங்களை வாரி வழங்குவார். ரசிகர்களும் ஷாரூக்கானுக்கு பிறந்த நாள் பரிசுகளுடன் அவரைக் காண குவிந்துள்ளார்கள். இப்படியான நிலையில் ஷாரூக் கான் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டிருந்தார்.
அதாவது, " எனக்காக காத்திருந்த எனது அன்பான ரசிகர்களை நான் வெளியே சென்று பார்க்க முடியாது என்று அதிகாரிகள் எனக்கு அறிவித்துள்ளனர். உங்கள் அனைவ்ரிடத்திலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் இப்படியான முடிவு எடுக்க காரணமே, கூட்டக் கட்டுப்பாட்டுப் பிரச்னைகள் தான். மேலும் உங்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காக மட்டும் தான்.
நான் இந்த முடிவை எடுத்துள்ளதற்கான காரணத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். என்னை நம்புங்கள்... உங்களை விட அதிகமாக உங்களைப் பார்ப்பதை நான் மிஸ் செய்வேன். உங்கள் அனைவரையும் பார்க்கவும் அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் ஆவலுடன் இருந்தேன், ஆனால் அது நடக்கவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் அனைவர் மீதும் பேரன்பு வைத்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு இணையவாசிகள் பலரும் பாராட்டினார்கள்.

நெரிசல் மரணங்கள்: நமது நாட்டில் கடந்த ஒரு ஆண்டுக்குள்ளாக மட்டும் கூட்ட நெரிசல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புஷ்பா 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின் போது ஒரு பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அதேபோல் ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்ற விட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெங்களூருவில் ரோடு ஷோ நடத்திய போது, அந்த கூட்டத்தினால், 11 பேர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உஷாரான ஷாரூக்: அதேபோல் தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதத்தில் கரூரில் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தான் பெரும் அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் கூட ஆந்திராவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்த துயரம் அரங்கேறியது. கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தை பார்த்த காவல்துறையினர் ஷாரூக்கானிடம் அறிவுறுத்தியதை அடுத்து அவர் ரசிகர்களை பார்க்க வெளியே வரவில்லை.

பிறந்த நாள் கொண்டாட்டம்: இப்படி இருக்கும்போது, அவர் ரசிகர்களுடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுக்கு, " எனது பிறந்த நாளை எப்போதும் போல சிறப்பு மிக்கதாக மாற்றிய உங்களுக்கு நன்றி. உங்களைச் சந்திக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கும் உள்ளது. அடுத்த பிறந்த நாளிலும் தியேட்டரிலும் உங்களை சந்திக்க வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











