பதான் பாக்ஸ் ஆபிஸ்: முதல் வாரத்தில் 400 கோடி வசூல்... ஷாருக்கானின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் இதுதானா?
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த வாரம் 25ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோனே, வில்லனாக ஜான் ஆப்ரஹாம் நடிக்க, ஏஜென்ட் டைகர் என்ற கேமியோ ரோலில் சல்மான் கானும் சேர்ந்து மிரட்டியுள்ளார்.
முன்னதாக பதான் படத்துக்கு எதிராக பாய்காட் பிரசாரம் செய்யப்பட்ட நிலையில், அதற்கெல்லாம் சேர்த்து முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸில் பதிலடி கொடுத்துள்ளார் ஷாருக்கான்.

ஏஜெண்ட் பதான்
ஹாலிவுட்டை போல இந்தியாவிலும் ஸ்பை திரில்லர் ஜானர் படங்களின் வருகை அதிகரித்துவிட்டது. பாலிவுட்டில் டைகர், வார் படங்களைப் போல, கோலிவுட்டில் விக்ரம் படமும் மாஸ் காட்டியது. இந்நிலையில், இப்போது ஷாருக்கானும் சீக்ரெட் ஏஜென்ட் அவதாரம் எடுத்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள பதான், மற்றுமொரு ஸ்பை திரில்லர் படமாக கடந்த வாரம் 25ம் தேதி வெளியானது. பதான் என்ற சீக்ரெட் ஏஜென்டாக நடித்துள்ள ஷாருக்கான், தீவிரவாதியாக மாறிய முன்னாள் இந்திய ராணுவ வீரர் ஜான் ஆபிரஹாமிடம் இருந்து நாட்டை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.

ஆக்ஷனில் மிரட்டிய ஷாருக்
ஷாருக்கானுடன் தீபிகா படுகோனேவும் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். துபாய் சாலைகளில் பெரிய டிரக் மீது ஷாருக்கானும் ஜான் ஆபிரஹாமும் போடும் சண்டைக் காட்சி செம்ம மாஸ்ஸாக வந்துள்ளது. அதைவிட முக்கியமாக இரண்டாம் பாதியில் ரஷ்ய நாட்டு சிறையில் இருக்கும் ஷாருக்கானை போட்டுத்தள்ள அந்நாட்டு போலீஸார் ரயிலில் அவரை கூட்டிச் செல்கின்றனர். அந்த ரயில் சண்டைக் காட்சியும் அப்போது ஷாருக்கானை காப்பாற்ற வரும் டைகர் ஏஜென்ட்டான சல்மான் கானும் அங்கு வர, இரண்டு கான் நடிகர்களும் சேர்ந்து ஆக்ஷன் விருந்து படைத்துள்ளனர்.

முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ்
ஆக்ஷன் சீன்ஸ், பிரம்மாண்டமான மேக்கிங் எல்லாம் இருந்தாலும் படத்தின் சில காட்சிகள் நம்பும்படி இல்லைதான். ஆனால், ஷாருக்கானின் ஹீரோயிசத்துக்காக ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 'பேஷ்ரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே காவி பிகினியில் ஆட்டம் போட்டது சர்ச்சையானது. இதனால் பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. ஆனாலும் இந்த பாய்காட் பிரச்சினைகளையெல்லாம் கடந்து முதல் வாரத்தில் 400 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது பதான்.

ரூ.429 கோடி வசூல் சாதனை
பதான் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 265 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் 164 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாம். ஆகமொத்தம் பதான் திரைப்படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ.429 கோடி வசூலித்துள்ளதாக யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் அதிவேகமாக 400 கோடி கலெக்ஷனை கடந்த முதல் படம் என்ற பெருமையை பதான் பெற்றுள்ளது. இதனை ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், வரும் நாட்களிலும் பதான் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











