ஐஎஸ்ஐ புதிய தலைவர் ஷாருக்கானின் உறவினரா?
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு புதிய தலைவராக இஸ்லாம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவராக உள்ள பாஷாவின் பதவிக்காலம் வருகிற 18ம் தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் இஸ்லாம் புதிய தலைவராக பதவியேற்பார்.
58 வயதான இஸ்லாம் தற்போது கராச்சி ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த இவரது குடும்பமே ராணுவ அதிகாரிகள் நிரம்பியதாகும்.
இவர் ஷாருக்கானின் தூரத்து உறவினர் என்று தகவல்கள் கூறுகின்றன. நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் முக்கிய தளபதியாக பணியாற்றியவர் ஷா நவாஸ் கான். இவர், ஷாருக்கானின் வளர்ப்புத் தாத்தா ஆவார். அதாவது ஷாருக்கானின் தாயார் லத்தீப் பாத்திமாவை, ஷா நவாஸ் கான் வளர்ப்பு மகளாக தத்தெடுத்து வளர்த்தவர் ஆவார். உறவு வகையில், இஸ்லாமுக்கும், ஷா நவாஸ்கான் தாத்தா முறை வருகிறாராம். இதனால் இஸ்லாமும், ஷாருக் கானும் கூட தூரத்து உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
ஷாருக்கானின் தாத்தா ஷா நவாஸ் கான் சுத்தமான இந்தியராக விளங்கியவர். நேதாஜியின் படையி்ல முக்கிய தளபதியாக செயல்பட்ட அவர் முன்பு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். 2ம் உலகப் போரின்போது அவர் படையில் இருந்தார். 1942ம் ஆண்டு சிங்கப்பூரை ஜப்பான் படைகள் நாசப்படுத்தியபோது பிடிக்கப்பட்டார் ஷா நவாஸ் கான். பின்னர் அவர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து மேஜர் ஜெனரலாக உயர்ந்தார். அப்போதைய பர்மாவில் அவர் போரில் பங்கேற்றார்.
சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து நான்கு முறை எம்.பியாகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஷாருக்கானின் உறவினர் இஸ்லாம் என்ற தகவலை ஐஎஸ்ஐ மறுத்துள்ளது. அந்தத் தகவல் சரியானதல்ல என்று அது விளக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications












