தற்குறி கூட்டமா? அஜித்தை விளாசி விட்ட பிரபலம்.. ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரசிகர்கள்.. டிவிட்டரில் ஒரே சண்டை!
சென்னை: நடிகர் அஜித் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி குறித்த விவாதங்கள் தொடர்ந்து இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. அந்த பேட்டியில் பேசியது பாசிடிவ் விசயங்களும் இருக்கிறது, கடுமையான விமர்சனத்திற்குரிய கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் பேச்சு குறித்து பிரபல எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்திருந்தார். இதற்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
ஷாலின் மரியா லாரன்ஸ் தனது எக்ஸ் பதிவில், " நான் ஹாலிவுட் நடிகர்கள் , பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸ் போன்றவர்களை பல காலமாக கவனித்து வருகிறேன். எத்தகைய பெரிய ஸ்டார்களாக இருந்தாலும் அவர்களுக்கு ரசிகர்களை மதிக்கும் மனப்பான்மை அதிகம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஹாலிவுட் நடிகர்கள் ரசிகர்களை கட்டி தழுவி கொள்வார்கள். அவர்களோடு சகஜமாக பேசுவார்கள். இந்தியாவில் பெரிய நடிகர்களில் பலர் அப்படி இல்லை என்றாலும் அமிதாப்பச்சன், அமீர்கான், சல்மான் கான் போன்றவர்கள் ரசிகர்களோடு அன்பாக பழகக் கூடியவர்கள்.
இன்னும் சொல்லப்போனால் மும்பை ஜுகு பகுதியில் இருக்கும் ஷாருக்கானின் வீட்டின் முன்னால் அவரை காண்பதற்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் நாட்டின் பல இடங்களில் இருந்து வருவார்கள். நானும் கூட போயிருக்கிறேன். அவர்களை நேரில் சந்திக்க வில்லை என்றாலும் அவர்களுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக ஷாருக்கான் எப்பொழுதெல்லாம் வீட்டில் இருக்கிறாரோ, அவருடைய பால்கனியில் வந்து மக்களைப் பார்த்து கையசைத்து விட்டு போவார். அது மக்களின் மீது வைத்திருக்கும் அன்பு. இன்னும் சொல்லப் போனால் தன்னை வளர்த்து விட்ட ரசிகர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதை.

பலர் சினிமாவுக்குள் நுழைவதே புகழைத் தேடித்தான். அதைத்தான் limelight என்று சொல்வார்கள். பெரிய திரையில் மக்கள் தங்களை பார்க்க வேண்டும்,ரசிக்க வேண்டும் ,கை தட்ட வேண்டும், விசில் அடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவு. அது மட்டுமல்ல தான் வெளியே செல்லும் பொழுது ரசிகர்கள் தங்களை கண்டு குதுகலிக்கும் பொழுது அதையும் ரசிப்பார்கள்.ஆரம்ப காலத்தில் அதை அதிகம் விரும்புபவர்கள் பிரபலமாக ஆக தங்களுடைய அந்தரங்க வாழ்க்கை பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு ஒரு விதமான பிரைவசியை விரும்புவார்கள்.
ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி அவர்களுக்கு ரசிகர்களின் பார்வை தேவை என்பது மிக முக்கியமாக தெரியும். ஏனென்றால் தான் ரசிக்கப்பட்டால் தான் தன் படங்கள் ஓடும் அதன் மூலம் தான் வியாபாரம் ஆகும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆகவே தான் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் ரசிகர்களின் மீது சிறு மரியாதையாவது வைத்திருப்பார்கள்.
FDFS: அஜித்தை பொருத்தவரை அவர் பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து இருக்கிறாரே தவிர கடந்த 10 வருடங்களில் அவர் நல்ல கதை அம்சங்கள் கொண்ட, நன்றாக நடித்த படங்களை வெளியிடவில்லை. அவர் வெறும் ரசிகர் அன்பு, ரசிகர் வெறி என்கின்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு காசு பார்த்துக் கொண்டிருக்கிறார். FDFS போன்ற விஷயங்களால் அதிக லாபத்திற்கு பழகிப்போன அவர் அவரை சுற்றி நடக்கும் ரசிகர் மனப்பான்மையை புரிந்து இருக்கிறார். அதை எந்த காலத்திலும் அவர் தடுக்க நினைக்க மாட்டார்.

ரசிக வெறி: உளவியல் ரீதியாக வேண்டாம் என்று சொன்னால் தலைகீழாக செய்வார்கள் என்கின்ற கோட்பாட்டை அவர் உணர்ந்து தான் இப்படி செய்யாதீர்கள் அப்படி செய்யாதீர்கள் என்று சொல்லி வருகிறார். ஆனால் உண்மையில் அந்த ரசிக வெறி தான் அவருக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ரசிகனை பார்த்து சிரிக்க மாட்டேன் ரசிகனை தொட மாட்டேன் ரசிகனை கட்டி அணைக்க மாட்டேன் என்று சொல்லுவது பிரைவசி என்கின்ற விஷயத்தை தாண்டி, என்னுடைய படத்தை கைதட்டி ஹிட் ஆக்குவதற்கு நீங்கள் தேவை ஆனால் உங்களை நான் என் தரத்திற்கு வைத்து பார்க்கவில்லை. அதனால் உங்களை தொடவும் விருப்பமில்லை என்பதையே நினைவூட்டுகிறது.
எலைட் மனப்பான்மை: இத்தனை வருடங்கள் அஜித்தை பார்த்து வருகிறேன். அவருடைய மனப்பான்மை எலைட் ஆக இருக்கிறது. அவருக்கு சமூக பொருளாதார அரசியல் பார்வை கிடையாது. அவருக்கு வர்க பார்வையும் கிடையாது. அவருக்கு "C "கிளாஸ் ரசிகர்கள் வேண்டும் பிழைப்பு ஓட. ஆனால் "C"கிளாஸ் ரசிகர்களை அவர் தனக்கு சமமாக மதிக்க வில்லை என்பது நிதர்சனம் ஆகிறது.
தற்குறி கூட்டமா?: ஆகச் சிறந்த நடிகர் ஆன கமல்ஹாசன் கூட ரசிகர்களிடம் நன்றாகவே நடந்து கொள்கிறார். அது அவர் மனிதர்களை சமமாக பார்க்கிறார் என்பதை காட்டுகிறது. அல்லது அப்படி காட்டிக் கொள்கிறார் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அஜித் போன்ற நடிப்பு வராத, ரசிகர்களை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய ஒரு மனிதன், அந்த ரசிகர்களை கருவேப்பிலையை போல் பயன்படுத்திவிட்டு தூக்கி போடுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதோ அறிவில்லாத கூட்டம், தற்குறி கூட்டம், நடிகர்களிடம் பழகத் தெரியாத கூட்டம் என்பது போல் அவர்களை அந்த பேட்டியில் சித்தரிக்கிறார். அதனாலே அவர்களிடமிருந்து விலகி இருக்கிறது போல் பேசுகிறார்.

ரசிகர்கள் பதிலடி: ஆனால் உண்மையில் அவர் அந்தஸ்து ரீதியாக, சமூக ரீதியாக தன்னுடைய ரசிகர்களை சமமாக பார்க்கவில்லை. அதனால்தான் அவர்களை தொடக்கூட அவர் கூச்சப்படுகிறார். இப்படிப்பட்ட ஒரு மனிதனின் படத்தை பார்த்து கைதட்டி ரசித்து ஓட வைக்க வேண்டுமா என்று அந்த ரசிகர்கள் தான் யோசிக்க வேண்டும். சுயமரியாதை இருப்பவர்கள் யோசிப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு அஜித் ரசிர்களோ, அஜித் தனது ரசிகர்களுடன் பல சந்தர்ப்பங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை பகிர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்கள். ஷாலின் மரியா லாரன்ஸ் பதிவுக்கு அஜித் ரசிகர்கள் பதிலளித்து வருவதால் பெரிய வார்த்தைப் போரே இணையத்தில் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











