சூர்யா – ஷங்கர் கூட்டணியில் இணையும் பாலிவுட் ஹீரோ..? இது யாருமே எதிர்பார்க்காத அப்டேட்டா இருக்கே!
சென்னை: கமலின் இந்தியன் 2, ராம் சரண் நடிக்கும் ஆர்சி 15 படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர்.
இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு பிரம்மாண்டமான ஒரு படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
இது வேள்பாரி நாவலை பின்னணியாகக் கொண்டு உருவாகவுள்ளதாகவும், இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

பிஸியான ஷங்கர்
ஷங்கரின் இயக்கத்தில் இறுதியாக ரஜினி நடித்த 2.O திரைப்படம் 2018ம் ஆண்டு வெளியானது. அதன்பின்னர் இந்தியன் 2, இந்தியின் அந்நியன் ரீமேக் படங்களை தொடங்கிய ஷங்கருக்கு, சென்ற இடமெல்லாம் வாய்க்கா தகராறு தான் நடந்தது. இந்நிலையில் அதில் எல்லாம் இருந்து மீண்டு வந்த ஷங்கர், இப்போது கமல் நடிக்கும் இந்தியன் 2, ராம் சரண் நடிக்கும் ஆர்சி 15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களுமே அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படமாகும் வேள்பாரி நாவல்
இந்நிலையில், ஷங்கரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி சு வெங்கடேசனின் வேள்பாரி நாவலை பின்னணியாக வைத்து ஷங்கர் படமாக எடுக்கவுள்ளதாகவும், அதில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அதுகுறித்து சீக்கிரமே அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கான ஸ்கிரிப்ட் ரைட்டிங் வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, பட்ஜெட் அதிகம் என்பதால் அதற்குள் RC 15, இந்தியன் 2 படங்களை ஷங்கர் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.

இணையும் ரன்வீர் சிங்?
ஷங்கர் இயக்கவுள்ள இந்தப் படத்தில், சூர்யா அல்லது கேஜிஎஃப் ஹீரோ யாஷ் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. அதேநேரம் இருவரும் சேர்ந்து தான் நடிப்பதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. இதனிடையே லேட்டஸ்ட் தகவலாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளாராம். அதாவது வேள்பாரி நாவல் மொத்தம் 3 பாகங்களாக உருவாகவுள்ளதாகவும், அதன் மூன்றாம் பாகத்தில் தான் ரன்வீர் சிங் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அப்படியானால் முதல் இரண்டு பாகங்களில் சூர்யா, யாஷ் நடிக்கிறார்களா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

சூர்யா - யாஷ் சந்திப்பு
சமீபத்தில் பெங்களூரு சென்றிருந்த சூர்யாவை யாஷ் நேரில் சந்தித்தார். அதனால், ஷங்கர் இயக்கவுள்ள வேள்பாரி நாவல், மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என்றும், அதில் சூர்யாவும் யாஷும் இணைந்து நடிக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. பொன்னியின் செல்வன் பட பாணியில் ஷங்கரும் சூர்யாவும் வேள்பாரி நாவலை படமாக எடுக்கவுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், கேஜிஎஃப் ஹீரோ யாஷை தொடர்ந்து பாலிவுட் டாப் ஸ்டார் ரன்வீர் சிங்கும் நடிக்கலாம் என்ற தகவல் இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











