"கேப்டனையே பாத்தமாதிரி இருந்துச்சு.." - அப்பாவை நினைவுபடுத்திய சண்முகபாண்டியன் #Maduraveeran
சென்னை : ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், மீனாட்சி, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'மதுரவீரன்'.
'மதுரவீரன்' திரைப்படம் ஜல்லிக்கட்டையும், அதன் பின்னணியில் நிகழும் அரசியலையும், சாதி மோதல்களையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
சாதிய பிரச்னைகளை இந்தப் படம் துணிந்து பேசியிருக்கிறது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மதுரவீரன்
'மதுரவீரன்' திரைப்படத்தில் ஊரில் மரியாதை மிக்க பெரிய மனிதரான சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கிறார் சண்முக பாண்டியன். சமுத்திரக்கனியின் நல்ல நோக்கம் பிடிக்காமல் அவரை திட்டமிட்டு கொலை செய்வார்கள் சிலர். அதன்பிறகு, சமுத்திரக்கனி குடும்பத்தினர் மலேசியாவுக்கு சென்று விடுவார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்த
பிறகு, பெரியவனானதும் மீண்டும் மதுரைக்கு வரும் சண்முக பாண்டியன், தன் அப்பாவோடு நடத்தாமல் விடுபட்டுப்போன ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவது என ஊர் மக்கள் முன்னிலையில் சபதம் எடுப்பார்.

நீண்ட டயலாக் பேசும் சண்முக பாண்டியன்
அதற்குப் பின்னான காட்சியில், "மலேசியாவுல இருந்து வந்த உனக்கு ஜல்லிக்கட்ட பத்தியும் மாட்டை பத்தியும் என்ன தெரியும்?" எனக் கேட்பார் பனானா பவுன்ராஜ். அப்போது தான் ஒரு நிமிடம் கேப்டனாகவே மாறி நீண்ட டயலாக் பேசுவார் ஜூனியர் கேப்டன்.

காளைகளின் வகைகள்
காளைகளில் இருக்கும் வகை, காளைகளின் நிறம், காளைகளில் பார்க்கப்படும் சுழி வகைகள் எல்லாவாற்றையும் வரிசையாக மூச்சு விடாமல் சொல்லி சுற்றி இருப்பவர்களை வாய்பிளக்க வைப்பார் சண்முக பாண்டியன்.

ரசிகர்கள் ஆரவாரம்
சண்முக பாண்டியன் மூச்சு விடாமல் டயலாக் பேசியதும், விஜயகாந்த் படங்களில் அவர் பேசுவதைப் போலவே இருந்ததால் தியேட்டர்களில் ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

அப்பாவை போலவே
சண்முக பாண்டியனுக்கு கேமரா பயம் இன்னும் சரியாக நீங்காததால் காட்சிகளில் நடிக்கத் தடுமாறுகிறார். ஆனால், ஆக்ஷன் காட்சிகளில் அப்பாவைப் போலவே அடித்து பறக்கவிடுகிறார்.


Click it and Unblock the Notifications











