சாந்தி திரையரங்கம் மூடப்பட்டது... சூர்யாவின் 24 கடைசி படம்!
சென்னை: ஒரு காலத்தில் சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்ந்த சாந்தி திரையரங்கம் நேற்று மூடப்பட்டது.
சென்னையின் பழைய சினிமா அரங்குகளில் ஒன்றாக சாந்தி திரையரங்கம் செயல்பட்டு வந்தது.

1961 ஜனவரி 12 அன்று அன்றைய முதலமைச்சர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது இந்தத் திரையரங்கம். அப்போது சென்னை அண்ணா சாலையில் இருந்த ஒரே குளிரூட்டப்பட்ட திரையங்கம் சாந்தி மட்டும்தான். ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி உமாபதியால் கட்டப்பட்ட இந்த அரங்கை, பின்னர் சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கிக் கொண்டார்.
நாகேஸ்வர ராவ் நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த தூய உள்ளம் தான் இங்கு திரையிடப்பட்ட முதல் படமாகும். அதே வருடம் மார்ச் 16-ல் சிவாஜி நடித்த பாவ மன்னிப்பு வெளியானது. இதுதான் இங்கு வெளியான முதல் சிவாஜி படம்.
2006 அக்டோபர் 11 அன்று இந்த வளாகத்தில் இன்னொரு திரையரங்கம் கட்டப்பட்டு அதற்கு சாய் சாந்தி என்று பெயரிடப்பட்டது.
55 வருடங்கள் கழித்து தற்போது வணிக வளாகமாக மாற உள்ளது. இதனால் இந்தத் திரையரங்கம் தற்போது மூடப்பட்டுள்ளது. சூர்யா நடித்த 24 படம் தான் இங்கு வெளியான கடைசிப் படமாகும்.
இந்த அரங்கில் ரஜினி நடித்த சந்திரமுகி படம் தினமும் மூன்று காட்சிகளாக 202 நாள்கள் ஓடியது. பிறகு ஒரு காட்சியாக 808 நாள்கள் ஓடி சாதனை செய்தது.
வணிக வளாகமாக மாறிய பிறகு, இந்த அரங்கில் 3 சினிமா அரங்குகள் இடம்பெறும். புதிய தியேட்டர் மற்றும் வளாகத்துக்கு சாந்தி என்ற பெயரே நிலைத்திருக்கும் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











