சாந்தி தியேட்டர் இடிக்கப்படுகிறது.. 4 அரங்குகள் கொண்ட மல்டிப்ளெக்ஸ் ஆக மாறுகிறது!
சிவாஜி குடும்பத்துக்கு சொந்தமான சாந்தி திரையரங்கம் இடிக்கப்படுகிறது. தனியார் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து இந்த அரங்கை 4 திரைகள் கொண்ட 'பல்லடுக்கு வணிக வளாக'மாக (மல்டிப்ளெக்ஸ்) மாற்றப்படுகிறது.
இதனை நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் கூட்டாக இன்று அறிவித்தனர்.

சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் சாந்தி திரையரங்கைக் கட்டியவர் மறைந்த ஆனந்த் அரங்க அதிபர் ஜி உமாபதி. அவரிடமிருந்து இந்த அரங்கை விரும்பி வாங்கினார் நடிகர் சிவாஜி கணேசன்.
அதன் பிறகு சிவாஜி நடித்த அத்தனைப் படங்களும் சாந்தியில் வெளியாகி வந்தன. திரிசூலம் படம் இந்த அரங்கில் ஒரு ஆண்டு காலம் ஓடியது.
சிவாஜி மறைவுக்குப் பிறகு சில மாதங்கள் அரங்கை மூடி வைத்து, சில மாற்றங்களை மேற்கொண்டனர். விளைவு, சாந்தி தியேட்டரில், சாய் சாந்தி என்ற சிறு திரையரங்கம் உருவானது.
இவற்றில் ரஜினி நடித்த சந்திரமுகி திரைப்படம் 800 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது.
இன்றும் புதிய படங்களை வெளியிடுவதில் சாந்தி முன்னணியில் இருந்தாலும், சில வசதிக் குறைவுகள் உள்ளன. சென்னையில் தனி திரையரங்குகள் இடிக்கப்பட்டு பெரும்பாலும் பல திரைகள் கொண்ட பல்லடுக்கு வணிக வளாகங்களாக (மல்டிப்ளெக்ஸ்களாக) மாற்றப்பட்டு வருகின்றன.
சாந்தி தியேட்டரையும் இடித்து, புதிய பெரிய மல்டிப்ளெக்ஸாகக் கட்ட முடிவு செய்துள்ளனர் சிவாஜி குடும்பத்தினர்.
ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த மல்டிப்ளெக்ஸை சிவாஜி குடும்பத்தினர் கட்டவிருக்கினர். புதிய மல்டிப்ளெக்ஸில் 4 திரையரங்குகள் இருக்கும். பல வணிக அரங்குகள் இதில் இடம்பெறும்.
இத்தகவல்களை நடிகர் பிரபுவும், அவர் அண்ணன் ராம்குமாரும், மகன் விக்ரம் பிரபுவும் இதனைத் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











