திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு.. குருமார்களை அவமதித்தால் அவ்வளவு தான்.. பகீர் எச்சரிக்கை
மும்பை: பாலிவுட் நடிகை திஷா பதானியின் பரேலி வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவமும், அதன் பின்னணியில் உள்ள மிரட்டல் சமூக ஊடகப் பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிவில் லைன்ஸ், பரேலியில் உள்ள திஷா பதானியின் இல்லத்திற்கு வெளியே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரேமானந்த் மகாராஜ் மற்றும் அனிருத்தாச்சார்ய மகாராஜ் ஆகிய இந்து துறவிகள் குறித்து திஷா பதானி தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்களே இந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணம் எனத் தெரிகிறது.

கோல்டி பிரார் கும்பல் இத்துப்பாக்கிச் சூட்டிற்கு பொறுப்பேற்றுள்ளது. அதிகாலை 4:30 மணியளவில் பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் இரண்டு குண்டுகள் வானத்தை நோக்கி சுடப்பட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவத்திற்குப் பொறுப்பேற்று ஒரு சமூக ஊடகப் பதிவு இந்தியில் வெளியானது. அதில் இரண்டு நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, ஒட்டுமொத்த திரையுலகிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "ஜெய் ஸ்ரீ ராம் ராம் ராம் அனைவருக்கும். நான் வீரேந்திர சரண், மகேந்திர சரண் (டெலானா). இன்று குஷ்பூ பதானி/ திஷா பதானி (பாலிவுட் நடிகை) வீட்டில் (வில்லா எண் 40, சிவில் லைன்ஸ், பரேலி, உ.பி.) நடந்த துப்பாக்கிச் சூட்டை நாங்கள் செய்தோம்" என்று அந்தப் பதிவு தொடங்குகிறது.
மேலும், "அவர் எங்கள் வணக்கத்திற்குரிய துறவிகளை (பிரேமானந்த் ஜி மகாராஜ் மற்றும் அனிருத்தாச்சார்ய ஜி மகாராஜ்) அவமதித்தார். எங்கள் சனாதன தர்மத்தை இழிவுபடுத்த முயன்றார். எங்கள் தெய்வங்களை இழிவுபடுத்துவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். இது வெறும் முன்னோட்டம் மட்டுமே. அடுத்த முறை, அவரோ அல்லது வேறு யாராவது எங்கள் மதத்தை அவமதித்தால், அவர்களின் வீட்டில் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள்" என்று அதில் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை திஷாவுக்கு மட்டுமல்லாமல், "திரைத்துறையின் அனைத்து கலைஞர்களுக்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும்" பொருந்தும் என்றும், "எங்கள் மதத்தையும் சமூகத்தையும் பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறோம்" என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு முன்னதாக, திஷா பதானியின் வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இவர்கள் டெல்லி-லக்னோ நெடுஞ்சாலை வழியாக பரேலிக்குள் நுழைந்து, வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தி, 7-8 நிமிடங்களுக்குள் அதே நெடுஞ்சாலை வழியாக வெளியேறியுள்ளனர்.
நடிகையின் வீட்டில் இருந்து நெடுஞ்சாலை வரை உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியவர்கள் வெளியாட்கள் என்பது தெரியவந்துள்ளது. சுமார் ஏழு சுற்றுகள், 2-3 குண்டுகள் தொடர்ச்சியாக சுடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தின் பின்னணியில், கடந்த ஜூலை மாதம் திஷாவின் தங்கை குஷ்பூ பதானி, அனிருத்தாச்சார்ய ஜி குறித்து அவதூறான கருத்துக்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முதலில் பிரேமானந்த் மகாராஜ் பற்றி கருத்து தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தனது கருத்துக்கள் அனிருத்தாச்சார்ய மகாராஜ் மீது மட்டுமே என ஒரு வீடியோ மூலம் குஷ்பூ விளக்கமளித்திருந்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











