'யோக்கியன் வரான்...' கதைதானா திருப்பூர் சுப்பிரமணியன் சமாச்சாரமும்?
யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ள வை என்றொரு பழமொழி இருக்கிறது. இந்தப் பெயரிலேயே ஒரு படம் கூட வந்துவிட்டது.
இந்தப் பழமொழி இப்போது தமிழ் சினிமாவில் பிரபல விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியத்துக்குத்தான் பொருந்தும் என்கிறார்கள்.

காரணம் சில தினங்களுக்கு முன், தியேட்டர்களில் திருட்டு விசிடி தயாரிக்கப்படுகிறது என்று நடிகர் விஷால் கோபப்பட்டார்.
உடனே ஆவேசமாக அவருக்கு பதில் கொடுத்தார் திருப்பூர் சுப்பிரமணியம். "கிராமங்களில் உள்ள தியேட்டர்கள் தினந்தோறும் 2000 கூட வசூல் பண்ண முடியாமல் திணறுகின்றன... திருட்டு விசிடி எடுக்காம வேறென்ன செய்வான்" என்று திருட்டு விசிடிக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்கியிருந்தார் அவர்.
அவர் அப்படிச் சொன்னதன் காரணம் இன்று ஒட்டு மொத்த சினிமாத் துறையினருக்கும் விளங்கிவிட்டது.
இப்படி திருட்டு விசிடி தயாரிப்பதே திருப்பூர் சுப்பிரமணியனின் தியேட்டர் ஒன்றிலிருந்துதான் என்ற உண்மை இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
கார்த்தி - நாகார்ஜூனா நடித்து சமீபத்தில் வெளியான தோழா படத்தை இரவு 10.48 மணியிலிருந்து க்யூபிலிருந்து நேரடியாகவே திருட்டு வீடியோ பதிவு செய்திருக்கிறார்கள், ஏடிஎஸ்ஸி என்ற தியேட்டரில். பொள்ளாச்சியில் உள்ள இந்த தியேட்டர் திருப்பூர் சுப்பிரமணியனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
க்யூபில் வெளியாகும் படங்களை திருட்டு வீடியோ பதிவு செய்தால் மிகத் துல்லியமாக அது எந்த தியேட்டரில் எத்தனை மணி ஷோவில் எடுக்கப்பட்டது என்பதெல்லாம் தெரிந்துவிடும்.
தோழா, 24 ஆகிய படங்களுக்கு பிரபலமான தியேட்டர்களே திருட்டு விசிடி தயாரித்தது அப்படித்தான் அம்பலமாகியிருப்பது.
தியேட்டர்காரர்களே இந்த திருட்டு வேலையைச் செய்தால், சினிமா எப்படி பிழைக்கும்?


Click it and Unblock the Notifications











