40 வருடங்களுக்குப் பின் பாகிஸ்தானில் முதல் முறையாக உறுமிய "கப்பர் சிங்"!
கராச்சி: இந்தியாவில் ரிலீசாகி கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு பிறகு, தற்போது பாகிஸ்தானில் முதல் முறையாக ஷோலே படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
தர்மேந்திரா, அமிதாப்பச்சன், ஹேமமாலினி, சஞ்சீவ்குமார் இணைந்து நடித்த இந்திப் படம் ‘ஷோலே'. கடந்த 1975-ல் ரிலீசான இந்தப் படத்தை ரமேஷ் சிப்பி இயக்கியிருந்தார்.
இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை புரிந்தது இப்படம். இப்படம் அப்போது பாகிஸ்தானில் வெளியாகவில்லை. ஆனால், பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் திருட்டு விசிடி மூலம் இப்படத்தைப் பார்த்தனர்.

இந்நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு தற்போது இப்படம் பாகிஸ்தானில் ரிலீஸ் செய்யப் பட்டுள்ளது. கராச்சியில் உள்ள தியேட்டர் ஒன்றில் திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் பாகிஸ்தான் விநியோகஸ்தரான நதீம் கூறும் போது, ‘ஷோலே' படம் பாகிஸ்தானில் நல்ல வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடித்த அமிதாப் பச்சன், தர்மேந்திரா ஆகியோர் பழுத்த தாத்தாக்களாகி விட்டனர். ஹேமமாலினி அழகான பாட்டியாகி விட்டார். சஞ்சீவ் குமார் இறந்து போய் விட்டார். வில்லனாக வெளுத்துக் கட்டிய அம்ஜத் கான் இறந்து போய் விட்டார் இந்த நிலையில் இப்போதுதான் இந்தப் படம் பாகிஸ்தானை எட்டிப் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











