சிங்கப்பூரில் 5வது சைமா விருது விழா... தென்னிந்திய நட்சத்திரங்கள் பங்கேற்பு!
சென்னை: 5வது சைமா விருது வழங்கும் விழா வரும் ஜூன் 30 மற்றும் ஜூலை 1-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கிறது. தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் திரளாகப் பங்கேற்கிறார்கள்.
சிறந்த தென் இந்திய படங்களுக்கு விருது வழங்கும் விழா, ஆண்டு தோறும் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

சைமா
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்இந்திய படங்கள் பங்கேற்கும் இதில் சிறந்த படங்கள், நடிகர்- நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
தென் இந்திய படங்களுக்கான சர்வதேச விருது என்பதன் சுருக்கம்தான் ‘சைமா' (SIIMA).
இதுகுறித்த அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் குஷ்பு, ஜெயம் ரவி, ராணா டகுபதி, வேதிகா, நிக்கி கல்ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குஷ்பு
குஷ்பு பேசும் போது, "தென் இந்திய படங்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய கவுரவமாக ‘சைமா' விருதுகள் இருக்கின்றன. சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 16 விதமான விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு மொழி படத்திலும் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்க தனித்தனி நீதிபதிகள் உள்ளனர். சிங்கப்பூரில் நடைபெறும் இந்த விழாவில் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்," என்றார்.

ஜெயம் ரவி
ஜெயம்ரவி, "இந்த ஆண்டுக்கான ‘சைமா' விருது எனக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி கலைஞர்களை ஒரே கூரையின் கீழ் சந்திக்கும் இந்த நிகழ்ச்சி மகிழ்ச்சியானது. சிங்கப்பூர் ரசிகர்களை சந்திப்பது உணர்ச்சிபூர்வமானது," என்றார்.

ராணா
ராணா டகுபதி பேசுகையில், "நீண்ட நாட்களுக்கு பிறகு எனது நண்பர் ஜெயம்ரவியை சந்திக்கிறேன். நான் நடித்த "பாகுபலி" ஜப்பான், சீனா உள்பட அனைத்து நாடுகளிலும் ரசிகர்களை மகிழ்வித்தது. சிங்கப்பூரில் நடைபெறும் ‘சைமா' விருது வழங்கும் விழா பிரமாதமாக அமையும்," என்றார்.

நிக்கி கல்ராணி
இந்த விழாவில் நிக்கி கல்ராணி கலந்து கொள்கிறார். சைமா விழாவில் தொடர்ந்து இரண்டாவகு முறையாக நிக்கி கலந்து கொள்கிறார்.
வேதிகாவின் தனி நடனமும் விழாவில் இடம் பெறுகிறது.


Click it and Unblock the Notifications











