விஜய், அஜித்துக்காக ரெடியான கதையில் சிம்பு… ஏஆர் முருகதாஸ் சொன்ன ஒன்லைன்… குஷியான STR
பெல்லாரி: மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது.
இதனையடுத்து சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் பத்து தல டிசம்பரில் வெளியாகிறது.
இந்நிலையில், சிம்புவின் அடுத்த படம் குறித்தும், அதன் இயக்குநர் பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவின் பத்து தல
முன்பெல்லாம் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவந்த சிம்பு இப்போது படப்பிடிப்புகளில் ரொம்பவே பிஸியாகிவிட்டார். வெங்கட் பிரபுவுடன் இணைந்து 'மாநாடு' படத்தில் மாஸ் ஹிட் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் வெளியான வெந்து தணிந்தது காடு படம் சிம்புவின் கேரியரில் முக்கியமானதாக அமைந்தது. இன்னொருபக்கம் சிம்புவின் 'பத்து தல' திரைப்படம், டிசம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ளது. கன்னடத்தில் வெற்றிப் பெற்ற மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் பத்து தல படத்தை, 'சில்லுன்னு ஒரு காதல்' கிருஷ்ணா இயக்கி வருகிறார்.

சூட்டிங் முடிந்தது
சிம்பு,வுடன் கெளதம் கார்த்திக், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஏ.ஜி.ஆர் என்ற கேங்ஸ்டராக சிம்பு நடித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருவது, பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் ஷூட்டிங் நிறைவடைந்தது. இதில் சிம்பு கலந்துகொண்ட புகைப்படங்களுடன், படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், சிம்பு நடிக்கவுள்ள அடுத்த படத்தின் இயக்குநர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய், அஜித் கதையில்?
சிம்புவின் நடிப்பில் 'கொரோனா குமார்' என்ற படம் தொடங்கப்பட்டது. கோகுல் இந்தப் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் படம் திடீரென டிராப் ஆனது. இதனிடையே சூரரைப் போற்று படம் மாஸ் காட்டிய சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும், அதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. முக்கியமாக இந்தப் படத்தை ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இப்போது, விஜய், அஜித்துக்காக முன்னணி இயக்குநர் தயார்செய்து வைத்திருந்த கதையில் சிம்பு நடிக்கவிருக்கிறாராம்.

ஓக்கே சொன்ன சிம்பு
அதாவது விஜய் அல்லது அஜித்துக்காக ஏஆர் முருகதாஸ் ஒரு கதை ரெடியாக வைத்திருந்ததாகவும், அவர்கள் இருவருமே அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதால், இப்போது அது சிம்புவின் கைகளுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை இயக்க கமிட் ஆனார் ஏஆர் முருகதாஸ். ஆனால், அப்போது அது டிராப் ஆகிதான், அது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படமானது.

விரைவில் அப்டேட்
அதேபோல், விஜய்க்கு சொன்ன கதையை அஜித்தும் ரிஜக்ட் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அந்தக் கதையில் சில மாற்றங்களை செய்து சிம்புவிடம் பேசியிருக்கிறார் ஏஆர் முருகதாஸ். இரண்டு முறை இதுகுறித்து சந்தித்து பேசியதாகவும், சிம்பு இந்த கதையில் நடிக்க ஒக்கே சொல்லிவிட்டதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது. இதனால், அடுத்து ஒரு மாஸ் அப்டேட் வெளியாகும் என சிம்பு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











