சிம்பு - வெற்றிமாறனின் அரசன்.. எப்போ தொடங்கியிருக்க வேண்டியது தெரியுமா?.. யப்பா இவ்வளவு லேட்டா?
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்துக்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. டைட்டில் நேற்றுதான் அறிவிக்கப்பட்டது. பெயருக்கு கலவையான விமர்சனங்கள்தான் கிடைத்திருக்கின்றன. அதேசமயம் சிம்புவை வைத்து வெற்றி தரமான சம்பவத்தை செய்வார் என்ற நம்பிக்கை யாருக்கும் குறையவில்லை. படத்தின் ஷூட்டிங் மிக விரைவில் தொடங்கவிருக்கிறது.
வெற்றிமாறனும், சிம்புவும் எப்போது இணைவார்கள் என்று கடந்த பல வருடங்களாகவே கேள்வி இருந்தது. அவர்கள் வடசென்னை படத்திலேயெ இணைந்திருக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போனது. அந்த சமயத்தில் சிம்புவின் எண்ணங்கள் ஒருநிலையில் இல்லை; காதல் தோல்வி, அதற்கு பிறகு ஆன்மீகம் என அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருர்ந்ததால் இரண்டு பேரும் டீசன்ட்டாக பேசி பிரிந்துவிட்டார்கள்; பின்னர்தான் தனுஷ் வடசென்னைக்கு வந்தார் என்று யூகங்களாக பல கதைகள் சொல்லப்படுவதுண்டு.
இணைந்த கூட்டணி: சிம்பு இப்போது வின்டேஜ் எஸ்டிஆராக காட்சியளிக்கிறார். மாநாடு படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்த அவர் வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைஃப் என வரிசையாக நடித்தார். இவற்றில் தக் லைஃப்தான் மொரட்டு அடி வாங்கியது. ஆனால் அவருக்கு பெரிய சேதாரம் இல்லை. சூழல் இப்படி இருக்க அனைவருக்கும் பெரிய சர்ப்ரைஸாக சிம்புவு, வெற்றிமாறனும் இணையப்போகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியானது. அதனை கேட்டு எஸ்டிஆர் ரசிகர்கள் துள்ளி குதித்தார்கள்.

சூப்பர் கூட்டணி: இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் தயாரிப்பில் உருவாகவிருந்த வாடிவாசல் மூடப்பட்டுவிட்டதால் சிம்பு - வெற்றிமாறனுடன் இணைந்திருக்கிறார் தாணு. அவரது தயாரிப்பு என்றாலே பிரமாண்டத்துக்கும், இயக்குநருக்கு கொடுக்கப்படும் சுதந்திரத்திலும் எந்த பிரச்னையும் இருக்காது. எனவே சிம்புவை வைத்து தரமான படமாக வெற்றிமாறன் கொடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எஸ்டிஆரின் லைன் அப்பிலேயே இப்படத்துக்குத்தான் ஓவர் ஹைப்.
சிலம்பரசனின் அரசன்: இப்படம் வடசென்னை 2வாக உருவாகும் என்று வதந்தி பரவியது. ஆனால் அதனை மறுத்த இயக்குநர்; இது வடசென்னை யுனிவர்ஸில் வரும் என்று விளக்கமளித்தார். இதன் ப்ரோமோ ஷூட் நல்லபடியாக முடிவடைந்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் பெயர் நேற்று அறிவிக்கப்பட்டது. படத்துக்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரெட்ரோ காஸ்ட்யூமில் கையில் அரிவாளுடன் இருந்தது மாஸ் என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
எப்போதோ அமைய வேண்டிய கூட்டணி: ஷூட்டிங் மிக விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்தக் கூட்டணி வடசென்னைக்கு முன்னரே அமைந்திருக்க வேண்டியது என்பது தெரியவந்திருக்கிறது. அதாவது பொல்லாதவன் பட சமயத்தில் சிம்பு காளை திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். இரண்டு படங்களுக்குமே ஜிவி பிரகாஷ் இசை. அப்போது வெற்றியும், சிம்புவும் ஜிவியின் ஸ்டூடியோவில்தான் சந்தித்துக்கொள்வார்களாம்.
தரமான சம்பவம் உறுதிதான்: அந்த சந்திப்புகளின்போதே வடசென்னை படம் பற்றி அதிகம் பேசிக்கொள்வார்களாம். எப்படியாவது இந்தப் படத்தை செய்துவிட வேண்டும் என்று நினைத்தார்களாம். ஆனால் சில பல காரணங்களால் தள்ளிப்போயிருக்கிறது. ஒருவழியாக இப்போது இத்தனை வருடங்கள் கழித்து இரண்டு பேரும் வடசென்னை யுனிவர்ஸுக்குள் வந்திருக்கிறார்கள். சம்பவம் உறுதிதான் என்பது திரைத்துறையில் இருப்பவர்களின் திண்ணமான நம்பிக்கை.


Click it and Unblock the Notifications











