சிம்புவின் ‘மாநாடு’ படம்...டி.ராஜேந்தர் திடீர் வழக்கு
மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கும் விவகாரத்தில் நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் திடீரென சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிக்கலில் சிக்கிய மாநாடு திரைப்படம்
நீண்ட நாட்களாக நடிகர் சிம்பு நடித்த மாநாடு படப்பிரச்சினை ஓடிக்கொண்டே இருந்தது. ஒருவழியாக சிம்பு படத்தை முடித்துக்கொடுக்க அதன் பின்னர் ஆரம்பித்தது பிரச்சினை, படம் வெளியாக தியேட்டர் கிடைப்பதில் பிரச்சினை உண்டானது. அதுகுறித்து டி.ராஜேந்தர் உஷா ராஜேந்தர் ஆகியோர் கடுமையாக கண்டித்து பேட்டி அளித்தனர். தன் மகனுக்கு எதிராக சதி நடப்பதாக பேட்டி அளித்தனர். பின்னர் ஒருவழியாக படம் வெளியான நிலையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சாட்டிலைட் உரிமை
நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தின் சாட்டிலைட் வெளியீட்டு உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு அந்நிறுவனம் விற்றுள்ளது. சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு விற்றதை எதிர்த்து நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சென்னை 20 வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மாநாடு வெளியாக டி.ராஜேந்தர், உஷாவின் உழைப்பு
அவரது மனுவில், " படம் திட்டமிட்டபடி வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்த நிலையில், கொட்டும் மழையிலும் இரவு பகல் பாராமல் நானும், என் மனைவியும் படத்தை வெளியிட பெருமுயற்சி எடுத்தோம். பைனான்சியர் உத்தம்சந்திடம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்பாக 5 கோடி ரூபாயை நானும், என் மனைவியும் உத்தரவாதம் செலுத்தினோம்.

அனுமதியின்றி மாநாடு உரிமையை விற்க முயற்சி
இந்நிலையில் எங்களிடம் தெரிவிக்காமலேயே படத்தின் சாட்டிலைட் உரிமை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்க முயற்சிகள் நடக்கிறது. எனக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்கும்வரை சாட்டிலைட் உரிமையை இறுதிசெய்ய தடைவிதிக்கவும், பணத்தை தர உத்தரம்சந்த், சுரேஷ் காமாட்சி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

தயாரிப்பாளர், ஃபைனான்சியருக்கு நோட்டீஸ்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஜீவபாண்டியன், வழக்கு குறித்து பைனான்சியர் உத்தம்சந்த், தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











