கேஸை வாபஸ் வாங்கிக்கறேன் ஜட்ஜய்யா... - சிம்பு
பீப் பாடல் தொடர்பாக இனிமேல் எந்தக் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்புமாறு தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் சிம்பு.
பெண்களை அவதூறு செய்யும் வகையில் பீப் பாடல் இருப்பதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத் ஆகிய இருவர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல், தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி அளித்த புகாரின்பேரில், சென்னையிலும் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

மேலும் சில இடங்களிலும் இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மனுக்களைத் தாக்கல் செய்தார். இதன்பிறகு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் தொடர்புடைய கீழமை நீதிமன்றத்தை அணுகி, ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு, தாக்கல் செய்யப்படும் மனுவை தொடர்புடைய நீதிமன்றம், சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் வரும் 11-இல் விசாரணைக்காக சிம்பு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், பீப் பாடல் தொடர்பாக இனிமேல் எந்தக் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்புமாறு தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிம்புவின் மனு ஏற்கத்தக்கதல்ல என்று நீதிபதி கூறியதால் தனது மனுவை வாபஸ் பெற்றார் சிம்பு.


Click it and Unblock the Notifications











