வைரமுத்துவை எப்படி அழைக்கலாம்.. இதுதான் எனக்கு வழங்கப்பட்ட நீதி.. கமலை விளாசிய பிரபல பாடகி!
Recommended Video
சென்னை: பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவுக்கு கவிஞர் வைரமுத்துவை அழைத்த நடிகர் கமல்ஹாசனை பாடகி சின்மயி சரமாரியாக சாடியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 7ஆம் தேதி தனது 65வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு தனது சொந்த ஊரான பரமக்குடியில் தனது அப்பாவுக்கு சிலை திறந்தார் கமல்ஹாசன்.
அடுத்த நாளே சென்னையில் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை திறந்த கமல், அங்கு இயக்குநர் கே பாலச்சந்தருக்கு சிலை வைத்தார். இந்த சிலையை ரஜினியும் கமலும் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் இயக்குநர்கள் மணிரத்னம், கேஎஸ் ரவிகுமார், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றதற்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடூவில் வெளிப்படையாக பகிர்ந்தார் பாடகி சின்மயி. இது தமிழ் திரைத்துறையில் பெரும் பரபரப்பை கிளப்பியது. சின்மயின் இந்த புகாருக்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருசேர எழுந்தது.

சிலை திறப்பு
தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் சின்மயி. இந்நிலையில் கமல் தனது புதிய அலுவலகத்தில் பாலச்சந்தர் சிலை திறப்புக்கு வைரமுத்துவை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எதற்கு அழைத்தார்கள்?
பாலியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்ட வரை எதற்காக இந்த விழாவிற்கு அழைத்தார்கள் என சின்மயி கமலை மறைமுகமாக சாடியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருப்பதாவது, நான் இங்கே குறிப்பிடுவது வைரமுத்துவை. ஒரு மனிதன் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ஆளானால் அவனது வாழ்க்கையே அழிந்துவிடும்.

முதன்மை விருந்தினர்
முகத்தை வெளியே கூட தலைக்காட்ட முடியாது. அப்படிப்பட்ட குற்றவாளியான வைரமுத்து தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழில் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.
எனக்கு வழங்கப்பட்ட நீதி
அவருக்கு எதுவும் நடக்கவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணான நான் தடை செய்யப்பட்டேன். இது தான் தமிழ் சினிமாவில் உள்ள பெரியவர்களால் எனக்கு வழங்கப்பட்ட நீதி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
பயமாக உள்ளது
இதேபோல் டிவிட்டரில், பாலியல் குற்றவாளிகள் பொதுமேடையில் தங்கள் இமேஜை எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். இவர்களில் சில அரசியல்வாதிகளும் அடக்கம். இவர்களை நினைத்தால் பயமாக உள்ளது என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











