எங்களுக்காக நீங்கள் இந்த சிறிய உதவியை செய்யக் கூடாதா?: எஸ்.பி. பி.
சென்னை: வயிற்றுப் பிழைப்புக்காக பாடுகிறோம் என்று பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
பாடகர்கள் சேர்ந்து இந்திய பாடகர்கள் உரிமை சங்கத்தை துவங்கியுள்ளனர். இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஏசுதாஸ், ஹரிஹரண், பாடகிகள் பி.சுசீலா, வாணி ஜெயராம் மற்றும் இளம்தலைமுறை பாடகர்கள் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் கூறுகையில்,

ராயல்டி
இந்திய அரசின் சட்டப்படி பாடகர்களுக்கான ராயல்டியை பெற்றுக் கொடுக்குமாறு இந்த சங்கம் கோரிக்கை விடுக்கிறது. டிவி, ரேடியோ, இணையதளம், செல்போன் ரிங்டோன் என்று எந்த வகையில் பாடல்களை ஒலிப்பினால் ராயல்டி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நேரடி இசைக் கச்சேரிகள் சங்கத்தின் கணக்கில் வராது.
பாடகர்கள் இந்த சங்கத்தில் சேர்ந்தால் ராயல்டியை பெறலாம். அவ்வாறு சேர விரும்புவோர் ரூ.1,000 கட்டணம் கட்டி உறுப்பினராகலாம், 1963ம் ஆண்டில் இருந்து துவங்கி அனைத்து பாடகர்களும் ராயல்டி பெற வாய்ப்பு இருக்கிறது என்றார்.

வயிற்றுப் பிழைப்பு
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பேசுகையில்,
நாங்கள் மக்களின் மகிழ்ச்சி, கவலைக்காக மட்டும் அல்லாது எங்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவும் பாடுகிறோம். உங்கள் சந்தோஷம், துக்கத்தில் எங்கள் பாடல்கள் ஒலிக்கிறது. அப்படி இருக்கையில் எங்களுக்காக நீங்கள் இந்த சிறிய உதவியை செய்யக்கூடாதா?. எங்களுக்கு சண்டை போட தெரியாது. சண்டை போடுவது போல் பாடத் தான் தெரியும். அதனால் இதை எங்களின் பணிவான வேண்டுகோளாக முன் வைக்கிறோம் என்றார்.

இன்னும் நல்லது நடக்கும்
ஏசுதாஸ் பேசுகையில்,
இசையமைப்பாளர்கள் மற்றும் பாடல் ஆசிரியர்களுக்கு வரும் ராயல்டியில் நாங்கள் பங்கு கேட்கவில்லை. ஒரு பாடலை பாடகர் மட்டும் பாடினால் போதாது. அதில் இசைக்கலைஞர்கள் மற்றும் கோரஸ் பாடகர்களும் அடக்கம். அவர்களுக்கும் பிற்காலத்தில் ராயல்டி கிடைத்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
50 ஆண்டுகளுக்கு பின்னர் பாடகர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது. வரும் காலத்தில் இன்னும் நல்லது நடக்கும் என்று நம்புவோம். பல இசையமைப்பாளர்கள், நடிகர், நடிகைகள் பாடுகிறார்கள். அவர்களும் இந்த சங்கத்தில் சேரலாம். இங்கு பெரிய பாடகர், சிறிய பாடகர் என்ற வேறுபாடு கிடையாது. அனைவரும் சமம் என்றார்.

பாடகர்கள் பிறந்தநாள்
இது தான் பாடகர்களின் பிறந்தநாள் என்று பி. சுசீலா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











