கடற்கரையில் சிவாஜிக்கு ஒரு சிலை!- மகன்கள் ராம்குமார், பிரபு கோரிக்கை
சென்னை: காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் சிலையை அகற்றினாலும், புதிதாக மெரினா கடற்கரையில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என சிவாஜி மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகக் கூறி சிவாஜி கணேசன் சிலையை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், இன்று அதிகாலை சிவாஜி சிலை அகற்றப்பட்டது.

இது குறித்து சிவாஜி மகன்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் கூறுகையில், "நீதிமன்ற உத்தரவுப்படி சிலையை கடற்கரை சாலையில் இருந்து அகற்றி இருக்கிறார்கள். அதை அடையாறு சிவாஜி மணி மண்டபத்தில் அமைக்க இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளோம். கோர்ட்டை மதிக்க வேண்டியது நமது கடமை. எனவே அரசு நடவடிக்கையை ஏற்கிறோம்.
மெரீனா கடற்கரையில் தலைவர்கள், புலவர்கள், அறிஞர்கள் சிலைகள், கண்ணகி சிலை, உழைப்பாளர் சிலைகள் உள்ளன. எனவே நடிப்புக்கு பெருமை சேர்த்த தமிழர் சிவாஜி கணேசனுக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவாஜி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் இந்த வேண்டுகோளை வைத்து இருக்கிறார்கள்.
பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக இருந்தவர் சிவாஜி. எனவே கடற்கரையில் உள்ள தேசத் தந்தை காந்தி, பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு இடையே, சிவாஜிக்கு புதிய சிலை அமைக்கும் முயற்சியை சிவாஜி ரசிகர் மன்றம் மூலம் நாங்கள் செய்வோம். இதற்கான அனுமதியை சட்டப்பூர்வமாக அரசிடம் பெற வற்புறுத்துவோம். எங்கள் குடும்பத்தினரும் சேர்ந்து இதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்," என்றனர்.


Click it and Unblock the Notifications











