3 வது முறையாக பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?
சென்னை: 3 வது முறையாக பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'மெரீனா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயனை துரை.செந்தில்குமாரின் 'எதிர்நீச்சல்' சோலோ ஹீரோவாக மக்களிடம் கொண்டு சேர்த்தது.
தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் வெற்றிவாகை சூடியதில் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் திகழ்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
சிவகார்த்திகேயனை அனைத்துத் தரப்பிலும் கொண்டுசேர்த்த படம் என்று வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைக் கூறலாம். சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் முதன்முறையாக வெளியான இப்படம் குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்தது. குறிப்பாக இப்படத்தில் சிவகார்த்திகேயன்-சூரி பேசும் வசனங்கள் இன்றளவும் மீம்ஸ் உலகில் பட்டையைக் கிளப்பி வருகின்றன.

ரஜினிமுருகன்
2 வது முறையாக சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் உருவான 'ரஜினிமுருகன்' பல்வேறு சோதனைகளைத் தாண்டி இந்த வருடம் வெளியானது. லேட்டாக வெளியானாலும் இந்த வருடத்தின் முதல் வெற்றிப்படம், முதல் 50 நாட்கள் படம் என்ற பெருமையை 'ரஜினிமுருகன்' தக்க வைத்துக் கொண்டது.

3 வது முறை
இந்நிலையில் 3 வது முறையாக சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இணைந்த 2 படங்களுமே சூப்பர்ஹிட் என்பதால் இப்படம் குறித்த தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். மேலும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' படங்களில் தன்னுடைய காமெடியால் கலக்கிய சூரி இப்படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ரெமோ
சிவகார்த்திகேயன் தற்போது 'ரெமோ' படத்தில் நடித்து வருகிறார். மேலும் மோகன்ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த 2 படங்களுக்குப் பின் பொன்ராம் இயக்கத்தில் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்படம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











