ஓயாத சிவகார்த்திகேயன் பஞ்சாயத்து... தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம்!
சிவகார்த்திகேயன் பஞ்சாயத்து இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது.
ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் உள்ளிட்ட மூன்று தயாரிப்பாளர்களுக்கு ஒப்புக் கொண்டபடி கால்ஷீட் தர மறுத்துள்ளதாக சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அவரோ இனி ரெமோ தயாரிப்பாளர் 24 ஏஎம் ஸ்டுடியோவுக்கு மட்டும்தான் படம் பண்ணுவேன் என்று கூறி, அடுத்த படத்தையும் ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் இதற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என மூன்று தயாரிப்பாளர்களும் ஃபெப்சி அமைப்பைக் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் ஃபெப்சி தலைவர் சிவாவோ, தான் வெளியூரில் இருப்பதாகக் கூறி சமாளித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று சிவகார்த்திகேயனின் புதிய பட ஷூட்டிங் ஆரம்பித்தது. இன்று ஷூட்டிங் தொடரவில்லை. ஃபெப்சி ஆட்கள் பாதிப் பேர் வராதது முக்கிய காரணம்.

'சிவகார்த்திகேயனின் புதிய பட ஷூட்டிங்குக்கு ஒத்துழைப்பு தர வேண்டாம் என கேட்டுக் கொண்ட பிறகும் தயாரிப்பாளர்களுக்கு துரோகம் செய்துள்ளது ஃபெப்சி,' என தயாரிப்பாளர் சங்கத்தில் கடும் கோபக் குரல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன.
இந்தப் பிரச்சினை குறித்துப் பேசவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கவும் இன்று மாலை 3 மணிக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு சிவகார்த்திகேயன் கட்டுப்படாவிட்டால் அவர் பெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











