"காவேரியம்மா மகன் கிரவுண்ட்ல இருந்தா.." - சிவகார்த்திகேயன் பட டைரக்டர் கருத்து!
Recommended Video

சென்னை : இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டி அதிக கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டம் மைதானத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு ஆகியவற்றுக்காக தமிழர்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுக்க போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழர்களின் வாழ்வுரிமையைக் காக்கும் இந்தப் போராட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நடைபெறவிருக்கும் சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான டி20 ஐ.பி.எல் போட்டியின்போது தமிழர்களின் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுக்கத் தயாராகி வருகின்றனர்.
இதனால், ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. எதிர்ப்புக் காட்டும் விதத்திலான பொருட்கள், கார் சாவி, குடிநீர் பாட்டில், பேக் உள்ளிட்ட பல பொருட்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்படுள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்க ரசிகர்கள் இந்தப் போட்டியைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. திரையுலகினர் பலரும் கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநரும், அடுத்து சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பவருமான டைரக்டர் ரவிகுமார் ராஜேந்திரன் இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
"சுயமரியாதையையும், தன்மானத்தையும் இழந்து, அந்த மைதானத்திற்குள் சென்று மகிழத்தான் வேண்டுமா?! ஒன்றுபடுவோம் புறக்கணிப்போம்! - உடல்நிலை சரியில்லை... காவேரியம்மா மகன் மைதானத்திலிருந்தால் உடனே வரவும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











