கவுண்டமணிக்கு பிடித்த ஊதா கலர் ரிப்பன்... மகிழ்ந்த சிவகார்த்திக்கேயன்
ஊதா கலர் ரிப்பன் பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சிவகார்த்திக்கேயனிடம் கூறியுள்ளார் கவுண்டமணி.
தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் சமீபத்தில் நடிகர் கவுண்டமணியை சிவகார்த்திகேயன் சந்தித்துப் பேசினார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து புதுப்படத்தில் கவுண்டமணி முக்கிய பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை என்கின்றனர் சிவகார்த்திக்கேயனுக்கு நெருக்கமானவர்கள்.

சிவகார்த்திக்கேயன்
ரஜினி முருகன் படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் பாக்யராஜ் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் சிவகார்த்திகேயன். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அக்டோபரில் புது படம்
சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜா தயாரிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கவுண்டமணியை சந்தித்து பேசியிருக்கிறார் சிவகார்த்திக்கேயன்.

கவுண்டமணியின் ரசிகர்
கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகர் சிவகார்த்திகேயன். அவரை சந்தித்து பேச வேண்டும் என்பது சிவாவின் நீண்ட நாள் ஆசை. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படச் சமயத்தில் சத்யராஜ் மூலமாக கவுண்டமணியை பார்க்க முயற்சிகள் மேற்கொண்டார். பட வேலைகளில் பிசியாக இருந்த காரணத்தால் இருவரும் சந்திக்க முடியாமல் போனது.
டிவியில் சிவகார்த்திக்கேயன்
தற்போது இருவருக்குமே நேரம் கிடைத்த காரணத்தால் சந்தித்து பேசியுள்ளனர். ஒருமணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் தொலைக்காட்சியில் சிவாவுடைய நிகழ்ச்சிகள், படக்காட்சிகள் எல்லாம் பார்த்திருப்பதாகவும், நன்றாக இருக்கிறது என்றும் கவுண்டமணி பாராட்டினார்.

ஊதா கலர் ரிப்பன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் ‘ஊதா கலர் ரிப்பன்' பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சிவாவிடம் தெரிவித்தாராம் கவுண்டமணி. நடந்தது இதுதான்... படத்தில் நடிப்பது பற்றியெல்லாம் பேசவில்லை என்று தெரிவிக்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











