சிவாஜியையே நடிப்பில் மிரட்டியவர் மனோரமா: சிவகுமார் புகழ் அஞ்சலி
சென்னை: தில்லானா மோகனாம்பாள் படத்தில் மனோரமாவின் ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரத்தை பார்த்து சிவாஜியே, இது என்னடா இவ நம்மையே சாப்பிட்டுவிடுவாள் போன்று என்று பீல் செய்த அளவுக்கு அவர் அற்புதமாக நடித்திருந்தார் என நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் மறைந்த நடிகை மனோரமாவுக்கு நடிகர் சிவகுமார் இறுதி அஞ்சலி செலுத்தினார். மனோரமாவின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மகன் கார்த்தியும் வந்திருந்தார்.
அஞ்சலி செலுத்திய பிறகு சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஒரு மனிதனுக்கு திறமையும், கடின உழைப்பும் இருந்தால் நாம் எங்கு பிறக்கிறோம் என்பது முக்கியமே இல்லை. எவ்வளவு கீழே பிறந்திருந்தாலும், பாதாளத்தில் பிறந்திருந்தாலும் மிகப் பெரிய எல்லையை தொட முடியும் என்பதற்கு உதாரணம் இந்த அம்மையார்.

பாப்பா
அப்பா ஒரு கவுரமான குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் பாப்பா என்று அழைக்கப்பட்ட இந்த மனோரமா பிறந்த உடன் அவரையும், அவரது தாயையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள்.

தாய்
பச்சக்குழந்தையான மனோரமாவை வைத்துக் கொண்டு அவரது தாய் பள்ளத்தூர் பகுதியில் வீட்டு வேலை செய்து அவரை காப்பாற்றினார். முறையாக பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் திருஞானசம்பந்தர் போன்று ஆண்டவன் அவருக்கு ஞானத்தை கொடுத்துவிட்டார்.

தியாகராஜ பாகவதர்
வீட்டிற்கு அருகில் இருந்த தியேட்டருக்கு அவர் அடிக்கடி செல்வார். உள்ளே செல்ல பணம் இல்லாததால் வெளியே நின்று சவுண்ட் பாக்ஸில் பாடல்களை கேட்டு 7 வயதில் தியாகராஜ பாகவதர் பாடல்களை அருமையாக பாடியவர்.

நாடகங்கள்
7, 8 வயதிற்கு பிறகு பள்ளத்தூர் பகுதியில் எங்கு எல்லாம் நாடகம் போடுகிறார்களோ அங்கு எல்லாம் இந்த பாப்பா போய் நடிக்கும். எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து வந்த கோபிசாந்தா என்ற இந்த பெண்மணி 1958ம் ஆண்டில் சென்னைக்கு வந்தார்கள்.

கண்ணதாசன்
கண்ணதாசன் தான் தயாரித்த மாலையிட்ட மங்கை படத்தில் காக்கா ராதாகிருஷ்ணனுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்குமாறு மனோரமாவிடம் கூறினார். இதை கேட்ட அவர் எனக்கு காமெடி வராதுங்களே என்றார். அதற்கு கண்ணதாசனோ, ஹீரோயினாக நடித்தால் அவர்களின் ஆயுள் 5 முதல் 10 ஆண்டுகள் தான். ஆனால் காமெடியாக நடித்தால் சிரஞ்சீவியாக இருக்கலாம் என்றார். அப்படி கண்ணதாசனின் வாழ்த்தை பெற்ற அவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

சிரஞ்சீவியாக
மனோரமா நேற்று வரைக்கும் சிரஞ்சீவியாக இருந்தார். கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் தான் மேடை நாடகத்தில் பேசிய வசனத்தை அதுவும் 7 நிமிடம் பேசினார்.

மணிமகுடம்
எஸ்.எஸ்.ஆர். அவர்களின் நாடக மன்றத்தின் கதாநாயகி மனோரமா. அவர் நடித்த மணிமகுடம் நாடகம் படமாக்கப்பட்டபோது அவரின் கதாபாத்திரத்தில் ஜெயலலிதா நடித்தார்கள்.

ஜில் ஜில் ரமாமணி
தில்லானா மோகனாம்பாள் படத்தில் மனோரமாவின் ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரத்தை பார்த்து சிவாஜியே, இது என்னடா இவ நம்மையே சாப்பிட்டுவிடுவாள் போன்று என்று பீல் செய்த அளவுக்கு அவர் அற்புதமாக நடித்திருந்தார்.

பாட்டி சொல்லை தட்டாதே
பாட்டி சொல்லை தட்டாதே படத்தை பார்த்த நடிகை பானுமதி அண்ணாவால் நடிப்புக்கு இலக்கணம் வகுத்ததாக கூறப்பட்ட பானுமதி என்னால் மனோரமாவை போன்று நடிக்க முடியாது என்று கூறிவிட்டார் என்றார் சிவகுமார்.


Click it and Unblock the Notifications











