ARM X SK : புஷ்பா 2னு பெயர் சொல்லாமல் கழுவி ஊற்றிய ஏ.ஆர். முருகதாஸ்.. கேட்ட ஒவ்வொரு கேள்வியும் சுளீர்!
சென்னை: தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகவுள்ள பெரிய படம் என்றால் அது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவுள்ள மதராஸி படம் தான். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது, இந்நிலையில் படத்தின் புரோமோசனை படக்குழு மெல்ல மெல்ல தொடங்கியுள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டவை ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் திரைத்துறையினர் மத்தியிலும் கவனம் ஈர்த்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதுமே ரசிகர்கள் உற்சாகமடைய தொடங்கிவிட்டனர். காரணம், தர்பார் படத்திற்கு பின்னர் பல ஆண்டுகளாக ஏ.ஆர். முருகதாஸைக் காணவில்லை. இப்படி இருக்கும்போது அவர் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்கிறார் என்றால் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியமே எனக் கூறும் அளவுக்கு இருந்தது.

ஏ.ஆர். முருகதாஸ் படம் என்றாலே ஆக்ஷன் படமாகத்தானே இருக்கும், சிவகார்த்திகேயன் அதற்கு செட் ஆவாரா என்ற கேள்வி கடந்த ஆண்டு தீபாவளி வரை மட்டும் தான் இருந்தது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் படம் அந்த கேள்விகளை எல்லாம் தவிடு பொடியாக மாற்றிவிட்டது. இந்த படமும் காதல் மற்றும் ஆக்ஷனில் காதல் எப்படியான ரோல் ப்ளே செய்கிறது என்பதுதான் கதை என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வில்லனிசத்துக்கு ஆதரவு: அதில் அவர் தொடர்ந்து பேசுகையில், " இன்றைக்கு திரை உலகமும் ரசிகர்களுமே மாறிவிட்டார்கள். அதாவது வில்லன் கதாபாத்திரம் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டார்கள். நார்கோஸ் மாதிரியான வெப் சீரீஸில் கெட்டது செய்பவன் தான் கதாநாயகனாக உள்ளான். எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது தான் எனக்கு நியாபகம் வருகிறது, ஜெயில் கைதிகளுக்கு எம்.ஜி.ஆர் படத்தைப் போட்டுக் காட்டினால், அனைவரும் நல்லவனாக இருக்கும் எம்.ஜி.ஆர் தான் வெற்றி பெறவேண்டும் என நினைப்பார்கள். ஒருவர் கூட வில்லனாக இருக்கும் நம்பியார் வெல்ல வேண்டும் என நினைக்க மாட்டார்கள்.

வேதனை: ஆனால் இன்றைக்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கதாபாத்திரங்கள்தான் இன்றைக்கு கதாநாயகர்களாக உள்ளார்கள். அப்படி இருக்கும்போது இன்றைக்கு ரசிகர்கள் கெட்டது செய்யும் கதாநாயகன் தான் வெல்ல வேண்டும் என்று நினைகிறார்கள். இந்த மனநிலை இன்றைக்கு பரவலாக பல ரசிகர்கள் மனதில் இருக்கிறது" என்று தெரிவித்தார்.
அட்டாக்: இவரது இந்த பேச்சு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா மற்றும் புஷ்பா 2 படத்தை மறைமுகமாக விமர்சிப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள். புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. புஷ்பா படத்தில் ரசிகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தைதான் ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் ரசிகர்கள் செம்மரக் கடத்தல்காரனான புஷ்பாவை ஆதரித்தார்கள். அதேபோல் தமிழிலும் பல படங்கள் வந்துள்ளது. உதாரணத்திற்கு அஜித் நடித்த மங்காத்தாவைக் குறிப்பிடலாம். படத்தின் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை நெகடிவ் கதாபாத்திரமாகவே அஜித்தின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இன்னும் பல படங்களை தமிழிலும் உதாரணம் காட்ட முடியும்.


Click it and Unblock the Notifications











