இவ்வளவு விலை கொடுத்து சின்ன படங்களை யார் பார்க்க வருவார்கள்?
சென்னை: டிக்கெட் விலை உயர்வு, பாஜக களேபரத்தின் புண்ணியத்தோடு, மக்களின் ஆதரவால் மெர்சல் வசூல் கடந்த ஒரு வாரத்தில் கணிசமாக குவிந்துவிட்டது.
ஆனால் நேற்றிலிருந்தே திரையரங்குகள் ஃப்ரீயாக ஆரம்பித்துள்ளன. மந்தமான முன்பதிவுதான் நடக்கிறது. 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரைதான் கூட்டம் வருகிறது.

இன்று சுத்தம். ஒரு குறிப்பிட்ட பெரிய மாலில் மாலைக் காட்சிக்கு இந்த நிமிடம் வரை ஒரு டிக்கெட் கூட விற்பனையாகவில்லை. இது படத்தின் மீதான குறை அல்ல. தியேட்டர்களின் குறை. அநியாயக் கட்டணம், தின்பண்டங்களுக்கு அராஜகமான விலை, தண்ணீர் உள்பட எந்தப் பொருளையும் உள்ளே எடுத்துச் செல்லக் கூடாது என்ற காட்டு தர்பார், பார்க்கிங் கட்டணக் கொள்ளை. இவை அனைத்தையும் தவிர்த்திருந்தால் இன்னும் கூட மெர்சலுக்கு ஹவுஸ்ஃபுல் போர்டு தொங்கும்.
மெர்சல் விஜய் படம். பொழுதுபோக்குப் படம். எனவே விலையைப் பார்க்காமல் முதல் வாரம் கூட்டம் வந்தது. ஆனால் மற்றப் படங்களின் நிலை?
சிறு முதலீட்டில் ஏதோ ஒரு கருத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் சின்னப் படங்களை இந்த விலை கொடுத்துப் பார்க்க யாராவது முன் வருவார்களா?
மீண்டும் ஒரு ரஜினி படம், அஜித் படம், விஜய் படம் அல்லது சிவகார்த்திகேயன் படம் வந்தால்தான் இந்தக் கூட்டத்துடன் ஆரம்ப வசூல் இருக்கும் என்பதுதான் இப்போதைய நிலை. இந்த மோசமான சூழலை உருவாக்கி வைத்திருப்பதும் திரையரங்குகள்தான். விலையைக் குறைத்து மக்களை அதிகம் தியேட்டருக்குள் வரவழைத்தால்தான் தியேட்டர் தொழில் உருப்படும் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.
சிறு முதலீட்டுப் படங்கள் இல்லாவிட்டால் தியேட்டர் நடத்துவது இன்னும் சிரமம். சிறு படங்கள் வெளியிடும்போது கட்டணங்களைக் குறைப்போம் என்று அபிராமி ராமநாதன் கூறியிருந்தார். அதைச் செய்வார்களா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











