குஷ்பு அணிக்கு அடி பணிந்த பெப்ஸி அமைப்பு... டிவி கலைஞர்களுக்கு 27.5% ஊதிய உயர்வு
சென்னை: சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் மற்றும், 'பெப்சி' எனப்படும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு இடையே நடந்த பேச்சில், 27.5% ஊதிய உயர்வுக்கு உடன்பாடு ஏற்பட்டது. குஷ்பு செயலாளராக இருக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஊதிய உயர்வு கொள்கைக்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அடிபணிந்துள்ளது.

சின்னதிரை தயாரிப்பாளர் சங்கம் (STEPS) மற்றும் பெப்ஸி (FEFSI) உடனான ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை இன்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜய குமார் , செயலாளர் குஷ்பூ ,பொருளாளர் டி.ஆர்.பாலேஷ்வர் பெப்ஸி தலைவர் சிவா , செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் , பொருளாளர் சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர் அப்போது, "வெகு நாட்கள் பேச்சில் இருந்த ஊதிய உயர்வு சார்ந்த பிரச்சனைக்கு இன்று நடந்த பேச்சு வார்த்தையின் மூலம் சுமூக தீர்வுகாணப்பட்டது.

சின்னத்திரை மிகவும் நலிந்து கொண்டு இருக்கிறது. இன்று தயாரிப்பாளர் சங்கமும் , பெப்ஸியும் கலந்து பேசி ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இரு தரப்பினரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.

இந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சம் யாதெனில் 27.5% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முறை 27.5% ஊதிய உயர்வு அளிக்கப்படவுள்ளது இது மூன்று வருடங்களுக்கு தொடரும். இன்று முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஏழு பிரிவை சேர்ந்த 5௦௦௦ தொழிலாளர்களுக்கும் மேல் பயனடைவார்கள் என்று தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











