ஒன்றியத்தின் தப்பாலே.. சர்ச்சையை கிளப்பிய கமல் பாட்டு.. போலீசில் புகார் அளித்த சமூக ஆர்வலர்!
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் சமூக ஆர்வலர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
Recommended Video
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து விரைவில் வெளியாக உள்ள விக்ரம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "பத்தல பத்தல" ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியானது.
கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதி பாடியுள்ள நிலையில், ஏகப்பட்ட அரசியல் கருத்துக்கள் மற்றும் மத்திய அரசை திருடன் என குறிக்கும் விதமாக பாடல் இருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது.

கமல் வரிகளில்
சினிமாவில் அரசியல் நய்யாண்டி பாடல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவரான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள "பத்தல பத்தல" பாடல் வரிகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. இந்த பாடல் வரிகளை எழுதி கமலே பாடி உள்ள நிலையில், இந்த விவகாரம் இன்னமும் பெரிதாக வெடித்துள்ளது.

திருடன் கையில் சாவி
"பத்தல பத்தல" என்ற பாடலில் மத்திய அரசை திருடன் என்று கூறும் வகையில் அமைந்துள்ள "கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே.. ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே... சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே" என கமல் எழுதி பாடியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஜாதிய ரீதியான பிரச்சனைகள்
அதுமட்டுமின்றி, ஜாதிய ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் அமைந்துள்ள "குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு, குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு.. ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-மே" என்ற பாடல் வரிகள் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் இருப்பதாக அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல் ஆணையரிடம் புகார்
இது போன்ற வரிகளை நீக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இணையதளம் மூலமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூன் 3ம் தேதி வெளிவரக்கூடிய விக்ரம் படத்திற்கு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு படத்தை தடை செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











