"கபாலி".. நமக்கெல்லாம் கிடைக்க யார் காரணம் தெரியுமா பாஸ்?
சென்னை: ரஜினி படத்தை இயக்க பல மூத்த இயக்குநர்கள் காத்துக் கொண்டிருக்க, இரண்டே படங்கள் இயக்கிய பா.ரஞ்சித் படத்தில் நடிக்க ரஜினி எப்படி சம்மதித்தார் என்று பலரது மனதையும் அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா தற்போது பதில் அளித்துள்ளார்.
அட்டக்கத்தி, மெட்ராஸ் என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பா.ரஞ்சித். அவரே ஆச்சர்யப்பட்டுப் போகும் அளவில், அவரது மூன்றாவது படமான கபாலியில் ரஜினி நாயகன் ஆனார்.
மூத்த இயக்குநர்கள் பலர் எப்போது நமக்கு ரஜினி பட வாய்ப்பு கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருக்கையில், ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கி முடித்து விட்டார் ரஞ்சித். அடுத்தமாதம் இப்படம் ரிலீசாக இருக்கிறது.

சாதனை நாயகன்...
ஆடியோ, டீசர் என இதுவரை கபாலி தொடர்பாக வெளியானவை அனைத்தும் சாதனை புரிந்து வருகின்றன. இந்நிலையில், இளம் இயக்குநரின் படத்தில் ரஜினி எப்படி நடிக்க சம்மதித்தார் என்ற பலரின் ஆச்சர்யத்திற்கு, ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.

அட்டக்கத்தி...
அதில் அவர் கூறியிருப்பதாவது, "நான் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக ‘கோவா' படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ரஞ்சித்தின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய முதல் படமான ‘அட்டக்கத்தி'யை நான் தயாரிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், ஒருசில காரணங்களால் அது முடியாமல் போனது.

மேட்ராஸ்...
அதன்பிறகு, ‘மெட்ராஸ்' படம் வெளிவந்த பிறகு, அந்த படத்தை பார்த்துவிட்டு அப்பா ஒருநாள் என்னை அழைத்து ‘மெட்ராஸ்' படம் மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார். உடனே, எனது மனதுக்குள் ரஞ்சித்தும், அப்பாவும் சேர்ந்து பணியாற்றினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஓடியது.

மலேசிய டான்...
பிறகு, ரஞ்சித்தை ஒருநாள் சந்தித்து அப்பாவுக்கு ஒரு கதை பண்ணுகிறீர்களா? என்று கேட்டதும், அவர் உறைந்தே போய்விட்டார். சில நாட்கள் கழித்து ரஞ்சித், என்னிடம் வந்து அப்பா நடிக்கும் படத்தில் அவர் ‘மலேசியா டானா'க வருகிறார் என்று சொன்னதும், அதுவே போதுமானதாக இருந்தது.

கபாலி...
இதை அப்பாவிடம் போய் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. அதுதான் இன்றைய கபாலி" எனத் தெரிவித்துள்ளார் சவுந்தர்யா.
மகிழ்ச்சி..!


Click it and Unblock the Notifications











