அப்பாவோட ஆசிர்வாதத்தால் எல்லாம் தொடங்கியது.. செளந்தர்யா ரஜினிகாந்த் சந்தோஷத்துக்கு இதுதான் காரணம்!
சென்னை: அப்பா ரஜினிகாந்தின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய படம் வெறும் 35 நாட்களில் நிறைவடைந்துள்ளது என தனது சந்தோஷத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் படக்குழுவுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து தெரிவித்துள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இந்த ஆண்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் அபிஷன் ஜீவிந்த். சசிகுமாரை வைத்து அயோத்தி படத்தை இயக்கிய மந்திரமூர்த்தியின் அடுத்த படம் இன்னமும் ஆரம்பிக்காத நிலையில், அபிஷன் ஜீவிந்த்தை ஹீரோவாக்கி அழகு பார்த்துள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த்.

அதிவேகமாக படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கூடிய விரைவில் தியேட்டரில் சந்திக்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளார்.
செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு: சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பசிலியான் நஸ்ரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் வெறும் 35 நாட்களில் நிறைவடைந்துள்ளன.
35 நாட்களில் நிறைவு: இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்றது. நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள ஒரு காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு, "லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி" படங்களின் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
அனஸ்வரா ராஜன் ஜோடி: அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்க, மலையாளத் திரையுலகின் நட்சத்திரமான அனஸ்வரா ராஜன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அனஸ்வரா ராஜன் இளைஞர்களின் கனவுக்கன்னியாகப் பார்க்கப்படுகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க, ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் குமார் படத்தொகுப்பு பணிகளையும், ராஜ்கமல் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளார். ப்ரியா ரவி உடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
ரஜினிகாந்த் ஆசிர்வாதம்: அப்பா ரஜினிகாந்தின் ஆசிர்வாதத்துடன் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக குறைந்த நாட்களில் அழகாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது என்கிற சந்தோஷத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அபிஷன் ஜீவிந்த் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி படம் அளவுக்கு இந்த படமும் வெற்றியை கொடுக்கும் என படக்குழு எதிர்பார்ப்புடன் உள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கே படம் வெளியாகுமா? அல்லது பிப்ரவரி மாதம் வெளியாகுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
விரைவில் ரிலீஸ்: MRP என்டர்டெயின்மென்ட் நிறுவனம், "குட் நைட்", "லவ்வர்" மற்றும் சமீபத்திய வெற்றிப்படமான "டூரிஸ்ட் ஃபேமிலி"யின் தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஜியோன் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து வழங்குகிறது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கியுள்ளது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் முதல் பாடல் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











