பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்… கமல்ஹாசனிடம் நடிகர் சங்க நிர்வாகிகள் திடீர் கோரிக்கை !
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நடிகர் கமல்ஹாசனை திடீரென சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்ட அடுத்து வாக்கு எண்ணிக்கை தாமதமானது.
இதனிடையே, கடந்த மாதம் இந்த தேர்தல் செல்லும் என்றும் வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, கடந்த மார்ச் 20-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நாசர் - விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றிபெற்றது. பொதுச்செயலளார் பதவிக்கு போட்டியிட்ட விஷால் மீண்டும் வெற்றிபெற்றார். இதேபோல் பொருளாளர் பதவியில் போட்டியிட்ட நடிகர் கார்த்தியும் வெற்றிபெற்றார்.
இதையடுத்து நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம், மே 8ல் சென்னையில் நடக்கிறது. இதில், கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கும் கட்டடத்தை, மீண்டும் கட்டி முடிக்க வசதியாக, நிதி திரட்ட பொதுக்குழு ஒப்புதல் பெறப்பட உள்ளது. மேலும், முந்தைய நிர்வாகிகள் மீதான வழக்கு, நலிந்த கலைஞர்களுக்கு ஒய்வூதியம் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர் நடிகர் கமல்ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு செயற்குழு ஒப்புதலின் படி கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை கமல் ஏற்றுக்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











