தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்… முக்கிய தீர்மானம் !
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட தேவைப்படும் நிதி குறித்து விவாதிக்கப்பட்டது.
Recommended Video
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம்வாக்குகள் எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணி கைப்பற்றியது.

இந்த நிலையில், இன்று நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் மதியம் 2 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் , நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்க தேவைப்படும் நிதியை வங்கியில் கடன் பெற்று கட்டிட பணிகளை நிறைவு செய்வதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
மேலும், மூத்த நடிகர்கள், நாடக கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ஜவுகார் ஜானகி ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சங்க பொதுக்குழு இன்று கூடியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











