வேத பாடசாலை தொடங்க.. தனது பூர்வீக வீட்டை காஞ்சி சங்கர மடத்துக்குத் தானமாக கொடுத்த எஸ்.பி.பி!
சென்னை: பாடகர் எஸ்.பி.பி, தனது பூர்வீக வீட்டை கடந்த பிப்ரவரி மாதம்தான், காஞ்சி சங்கரமடத்துக்கு தானமாக வழங்கினார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது லேசான அறிகுறிதான், விரைவில் திரும்பி வருவேன் என்று அவர் கூறியிருந்தார்.

அவசர சிகிச்சை
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை மோசமானதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப் பட்டது. வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் சிகிச்சை அளித்தனர். அவர் குணமடைய ரசிகர்கள், திரையுலகினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

காலமானார்
பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த 51 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை நேற்றுமுன் தினம் மோசமானது. அவர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 74.

கண்ணீர் அஞ்சலி
பாடும் நிலா பாலு என்று அன்புடன் அழைக்கப்படும் அவருடைய மரணம் சினிமா துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் உடல், காம்தார் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது. ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவர் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நடிகர்கள் விஜய்
அங்கு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அக்கம் பக்கத்து ஊர்களை சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்ததால், வரிசையில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு நடிகர்கள் விஜய், அர்ஜுன், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், இசை அமைப்பாளர்கள் தினா, தேவிஶ்ரீ பிரசாத் உள்பட அஞ்சலி செலுத்தினர்.

வேத பாடசாலை
மறைந்த எஸ்.பி.பியின், பூர்வீக வீடு ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாவட்டத்தில் இருந்தது. அவர் சென்னைக்கு குடிவந்து விட்டாலும் அந்த வீடு நெல்லூரில் அப்படியே இருந்து வந்தது. இதை வேத பாடசாலை அமைப்பதற்காக, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை நேரில் சந்தித்து, சங்கரமடத்துக்கு தானமாக அளித்தார்.

சங்கரமடம்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குடும்பம் பாரம்பரியமிக்கது. அவர் தந்தை எஸ்.பி.சம்பமூர்த்தி, ஹரிஹதா வித்வான். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் தீவிர பக்தர். அதனால் பல கர்நாடக சங்கீத வித்வான்கள் இவர் வீட்டில் பாடல்கள் பாடியுள்ளனர்.
இந்த பூர்வீக வீட்டை கடந்த பிப்ரவரி மாதம் அவர் காஞ்சி சங்கரமடத்துக்கு தானமாக கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











