சின்ன கலைவாணர் விவேக் 61: டோன்ட் வொரி பீ ஹேப்பி… ரசிகர்களை மகிழ்வித்த மகா கலைஞனின் மறுபக்கம்!
சென்னை: தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞர்களில் மிக முக்கியமானவர் விவேக்.
ரசிகர்களால் சின்ன கலைவாணர் என கொண்டாடப்பட்ட விவேக், சினிமாவையும் கடந்து மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது.
கலைகளை மட்டும் நேசிக்காமல், அதனை ரசித்து மகிழ்ந்த மக்களின் மீதும் உண்மையான பற்றுள்ளவராக வாழ்ந்து மறைந்த சிறப்புக்குரியவர் விவேக்.

பாலச்சந்தர் பட்டை தீட்டிய கலைஞன்
விவேக் என்ற பெயரைக் கேட்டதும் அனைவருக்கும் உடனடியாக நினைவில் வருவது 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்" என்ற இந்த வசனம் தான். இப்படி ஒற்றை வரியில் வாழ்வின் மொத்த யதார்த்தத்தையும் நகைச்சுவையாக கூற விவேக் என்ற ஞானியை தவிர வேறு யாராலும் முடியாது. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக வேலை பார்க்க வேண்டும் என விரும்பிய விவேக், காலத்தின் ஞானச் சக்கரத்தில் சிக்கிவிட்டாரோ என்னவோ.? விதி அவரை நகைச்சுவை கலைஞனாக மக்களிடம் கொண்டு சேர்ந்தது, அதுவும் ஒரு பண்பட்ட மக்கள் கலைஞனாக.

சின்ன கலைவாணர் விவேக்
புது புது அர்த்தங்கள், கேளடி கண்மணி என மெல்ல மெல்ல முழுநேர நடிகனாக மாறிய விவேக், போகிற போக்கில் சமூக அக்கறைகளையும் தனது நகைச்சுவைகளில் கூடுதலாக சேர்க்கத் தொடங்கினார். இது கலைவாணர் என்எஸ்கேவின் பாணியாக இருந்தாலும், அங்கேயும் தனது தனித்துவத்தை காட்டி மக்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டார். அதன் நீட்சியால் அவருக்கு சின்ன கலைவாணர் என்ற பெயரே நிரந்தரமானது. விவேக்கின் காமெடி காட்சிகளில் பகுத்தறிவும் பட்டறிவும் புதுவெள்ளமாக பாய்ந்தது. சிரிப்பு பாதி, சிந்தனை மீதி என்பதே விவேக் தனது வசனங்களில் வரையறுத்துக்கொண்ட விதியாகிப் போனது.

மாசற்ற மனிதப் பண்பாளன்
கல்வி, மருத்துவம், மூட நம்பிக்கை, சிசு கொலை, சாதிய பாகுபாடு, சமூக ஏற்றத்தாழ்வு என இங்கே புரையோடிக் கிடந்த பழமைவாதம், பிற்போக்குத்தனமான நவீனம் போன்றவற்றையெல்லாம் வெளுத்து வாங்கினார். அதேபோல், தன்னுடன் நடித்த சக கலைஞர்களையும் பக்குவமாக வழி நடத்தியதும், அவர்களுக்கு தேவையென்றால் ஓடோடிப் போய் உதவி செய்ததிலும் விவேக் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். விவேக் மறைந்த பின்னர் அவரது இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்களும் அவர்கள் சிந்திய கண்ணீருமே இதற்கெல்லாம் சாட்சி.

டோன்ட் வொரி… பீ ஹேப்பி…
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்" என்ற கண்ணதாசனின் வரிகளுக்கு அர்த்தம் கொடுத்தவர்களில் விவேக்கும் ஒருவராகிப் போனார். மறைந்த கலைஞர்கள் எப்போதும் உடலளவில் மட்டுமே இம்மண்ணை விட்டு விலகி நிற்கின்றனர். அதிலும் விவேக் போன்ற கலைஞன் காலச்சக்கரத்தின் ஒவ்வொரு நொடியிலும் ஏதோ ஒரு மனிதனுக்கு இளைப்பாறுதலையும் தன்னம்பிக்கையும் ஒருசேர விதைத்துக்கொண்டே இருப்பான். அங்கு "இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்" என்ற வசனமும் கேட்கும், "எலே டோன்ட் வொரி பீ ஹேப்பி" என்ற வசனமும் ஓங்கி ஒலிக்கும். அதுவே விவேக் என்னும் மகத்தான கலைஞனின் சாதனைகளில் முக்கியமானது.


Click it and Unblock the Notifications











