'ரஜினி போனில் பேசினார்.... சிங்கம் கர்ஜித்தது போல இருந்தது.. மகிழ்ச்சி!' - லைகா ராஜு மகாலிங்கம்
சென்னை: ரஜினிகாந்த் தன்னுடன் போனில் பேசியதாகவும், அவர் குரலில் சிங்கத்தின் கர்ஜனை போன்ற உற்சாகம் தெரிந்ததாகவும் லைகா நிறுவன நிர்வாகி ராஜி மகாலிங்கம் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் ‘கபாலி', ‘2.ஓ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து படங்கள் உருவாகிவருகின்றன.
தொடர் படப்பிடிப்பிலிருந்த ரஜினி, ஓய்வு மற்றும் 2.ஓ படத்தின் சில பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஆனால் இங்கே அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள்.

ஓய்வா சிகிச்சையா?
அவர், தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால் ஓய்வு எடுப்பதற்காக சென்றதாக ஒருசிலரும், அவரது உடல்நிலை மிகவும் பலவீனமடைந்ததால் சிகிச்சைக்காக சென்றிருப்பதாக ஒருசிலரும் தெரிவித்து வந்தனர்.
ஆனால், ரஜினி குடும்பத்தார் மற்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து ரஜினி ஓய்வுக்காக மட்டுமே அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டது.

அண்ணனால் மீண்டும்...
சமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலில் கபாலி படம் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பூஜை செய்துவிட்டு வெளியே வந்த ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா, ரஜினி சிகிச்சைக்காகத்தான் அமெரிக்கா சென்றதாகக் கூறினார்.
இதையடுத்து, மறுபடியும் ரஜினியின் உடல்நிலை குறித்த ஜோசியங்களை வெளியிட ஆரம்பித்தனர்.

லைகா ராஜு மகாலிங்கம்
இந்நிலையில், ரஜினியின் ‘2.ஓ' படத்தை தயாரித்து வரும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜு மகாலிங்கம், தலைவரின் உடல்நிலை குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிங்கத்தின் கர்ஜனை போல்
அவர் கூறும்போது, ‘‘இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினி என்னை அழைத்தார். அவர் பேசியது சிங்கம் கர்ஜித்தது போல் இருந்தது. அவர் உடல் நிலை குறித்து வெளிவந்த வதந்திகளுக்கெல்லாம் இதுதான் முற்றுப்புள்ளி. மகிழ்ச்சி!"
-என்று தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள்
அமெரிக்காவிலிருந்து ஜுலை 3-ந் தேதி திரும்பி வருவதாக கூறப்படுகிறது. அவர் வந்தபிறகு ‘கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











