மயிலு முதல் மகாராணி வரை... ஸ்ரீதேவியின் மறக்க முடியாத பாத்திரங்கள்!
Recommended Video

ஸ்ரீதேவி தமிழில் ஏற்று நடித்த பல பாத்திரங்களுக்கு அவர் பெருமை சேர்த்தார் என்பதே உண்மையாகும். பதினாறு வயதினிலே மயிலு பாத்திரத்திலிருந்து, தமிழில் அவர் கடைசியாக நடித்த அடுத்த வாரிசு இளவரசி பாத்திரம் வரை, அனைத்திலும், அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.

மயிலு - பதினாறு வயதினிலே
பாரதிராஜாவின் முதல் படம் பதினாறு வயதினிலே. இந்தப் படத்தில் அவர் புகழ்பெற்ற மயிலு பாத்திரம் ஏற்றிருந்தார். அதற்கு முன்பே பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தில் வலுவான பாத்திரத்தில் நடித்திருந்தாலும், பதினாறு வயதினிலே படம்தான் ஸ்ரீதேவியின் முத்திரைப் படமாக அமைந்தது.

மனிதரில் இத்தனை நிறங்களா
ஆர்சி சக்தி இயக்கத்தில் உருவான மனிதரில் இத்தனை நிறங்களா படத்தில் ஸ்ரீதேவி ஏற்ற சாந்தா என்ற அநாதைப் பெண் பாத்திரம் மிகச் சிறப்பானது. அந்த வேடத்தில் வாழ்ந்திருந்தார் ஸ்ரீதேவி.

சிகப்பு ரோஜாக்கள்
பணக்கார சைக்கோ திலீப்புக்கு வாழ்க்கைப்படும் சாரதா என்ற சாதாரண குடும்பத்துப் பெண் பாத்திரம். ஜவுளிக்கடையில் கமல் ஹாஸனைக் கண்டு காதல் வயப்படுவதில் இருந்து, அவர் சைக்கோ எனத் தெரிந்து பதறி தப்பித்து ஓடுவது வரை கமல் ஹாஸனை விட ஒரு படி மேலாக நடிப்பைத் தந்திருப்பார் ஸ்ரீதேவி.

ப்ரியா
ப்ரியா என்ற நடிகையாக, ஒரு நடிகை எப்படி இருப்பார், அவர் சூழல், சூழ்நிலைக் கைதியாக சிக்கிக் கொண்டு அவர் தவிப்பது என அத்தனையையும் மிகத் தத்ரூபமாகக் காட்டியிருப்பார் நடிகை ஸ்ரீதேவி. அந்தப் படத்தில் மிக இயற்கையான அழகுடன், காட்டுப் பூ மாதிரி களையாகவும் காட்சி தருவார் ஸ்ரீதேவி.

ஜானி
இந்தப் படத்தில் ரஜினிதான் ஹைலைட். இரட்டை வேடங்கள். இரண்டிலுமே பின்னி எடுக்கும் பாத்திரப் படைப்பு. ஆனால் அர்ச்சனா என்ற பாடகி பாத்திரத்தை அவர் ஏற்று நடித்திருந்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. ரஜினிக்கு மட்டுமல்ல, ஸ்ரீதேவியின் நடிப்பு வாழ்க்கையிலும் மறக்க முடியாத படம் இந்த ஜானி.

வறுமையின் நிறம் சிவப்பு
பாலச்சந்தரின் இந்தப் படத்தை தமிழ் சினிமா அத்தனை சீக்கிரம் மறக்க முடியுமா? டெல்லியில், மானத்து பயந்து வறுமையை மறைத்து வாழும் ஒரு எளிய பெண்ணாக ஸ்ரீதேவி மனதைக் கவர்வார்.

மூன்றாம் பிறை
மனநிலை பிறழ்ந்த விஜயா, நவ நாகரீக பாக்யலட்சுமி என இருவேறு பரிமாணங்களில் ஸ்ரீதேவி கலக்கிய படம் மூன்றாம் பிறை. இந்தப் படத்துக்காக அவருக்கு நியாயமாக தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்காததில் ஸ்ரீதேவி மிகுந்த வருத்தப்பட்டார். ஆறுதலாக தமிழக அரசின் சிறந்த நடிகை விருது கிடைத்தது.


Click it and Unblock the Notifications











