தமிழ், தெலுங்கு, கன்னட மாநிலங்களின் செல்ல மகன் நான்... ராஜமௌலி பெருமிதம்
ஹைதராபாத்: பத்மஸ்ரீ விருதிற்கு கர்நாடகா அரசு என்னை சிபாரிசு செய்ததை நான் தாமதமாகத் தான் தெரிந்து கொண்டேன் என்று இயக்குநர் ராஜமௌலி தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலிக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை அளிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த விருது விஷயம் தெரிந்ததும் ராஜமௌலிக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் இந்த விருதிற்கு தான் தகுதியானவன் அல்ல எனினும் விருது கிடைத்ததில் மகிழ்ச்சியே என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் "ஆந்திர அரசு எனது பெயரை விருதுகளுக்கு சிபாரிசு செய்ய முயன்றபோது நான் அதனைத் தடுத்து விட்டேன்.
ஆனால் எனக்கு விருது கிடைத்த செய்தி அறிந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது எப்படி நடந்தது என்று நான் விசாரித்த பின்னர் கர்நாடகா அரசு எனது பெயரை சிபாரிசு செய்ததை அறிந்து கொண்டேன்.
நான் பிறந்தது கர்நாடகா, படித்தது ஆந்திரா வேலை செய்வது தமிழ்நாட்டில். இதன் மூலம் 3 மொழி பேசும் மாநில மக்களின் செல்ல மகனாக நான் இருக்கிறேன்.
எல்லா மாநிலங்களின் மகனாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று ராஜமௌலி பெருமையுடன் கூறியிருக்கிறார்.ராஜமௌலி தற்போது பாகுபலி 2 படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











